இயற்கை வளங்களை அழித்து அப்படி என்ன சாதனை படைக்க போகிறீர்கள்: திருமாவளவன் காட்டம்
8 வழி சாலைக்கு திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திருமலை: மத்திய அரசின் சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலையை திட்டத்தினை செயல்படுத்திட இயற்கை வளங்களை அழித்து அப்படி என்ன சாதனை படைக்க போகிறீர்கள் என்று திருமாவளவன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தாழ்த்தப்பட்டோருக்கான உரிமை மீட்பு மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது:
பசுமைச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு ஏன் அவ்வளவு அவசரம் காட்டுகிறது என்று புரியவில்லை. என்ன தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மக்கள் மீது இந்த திட்டம் திணிக்கப்படுகிறது? விளைநிலங்களையோ, குடியிருப்புகளையோ, கையகப்படுத்துவது என்றால் அப்பகுதி மக்களின் கருத்தை கேட்டு செயல்பட வேண்டும் என்ற நிபந்தனைகளே உள்ளது. ஆனால் அதனை அரசு செய்யவில்லை.
சேலம் 8 வழிச் சாலையை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு அடக்குமுறை சட்டங்களை ஏவுவது கண்டிக்கத்தக்கது.
அது தற்போது ஊடகத்தினர் மீதும் திரும்பியுள்ளது. ஊடகத்தினர் மீது அடக்குமுறையை பயன்படுத்தி வருவது அதிர்ச்சியாகவும் உள்ளது. இயற்கை வளங்களை இப்படியெல்லாம் அழித்து அப்படி என்ன சாதனை படைக்க போகிறீர்கள்?
சேலம் 8 வழிச் சாலை திட்டத்தினை கண்டித்து வரும் 17-ம் தேதி திருவண்ணாமலையிலும், 20-ம் தேதி சேலத்திலும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் மிகப்பெரிய பேரணி நடத்தப்படும்.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.