இடைத்தேர்தல் ரத்தால் ஒரு பயனுமில்லை… மீண்டும் தேர்தல் வைத்தாலும் இதேதான் நடக்கும்… திருமா ஆவேசம்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஒரு பயனும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து ஆர்.கே. இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் ஒரு பயனும் இல்லை. மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் இதேதான் தொடரும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன.
கடுமையான பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து, தேர்தல் ஆணையம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது:
தேர்தல் ஆணையத்தின் நாடகம்
ஆர். கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது என்பது பச்சிளம் குழந்தைகள் கூட தெரிந்து வைத்திருக்கிறது. ஏதோ தேர்தல் ஆணையம் கடைசி நேரத்தில்தான் இந்த உண்மைகளை எல்லாம் கண்டுபிடித்தது என்பது போன்ற ஒரு நாடகத்தை நடத்தியுள்ளது.
பொதுத் தேர்தல் ரத்து?
ஒரு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்ய முடியும் என்றால் ஒரு பொதுத் தேர்தலை ரத்து செய்ய முடியுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஏனென்றால் பொதுத் தேர்தலிலும் இதேபோன்ற முறைகேடுகள் நடக்கத்தான் செய்கின்றன. நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன.
மீண்டும் போட்டி
நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது கூட 234 தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா நடந்ததை ஊர் அறியும். உலகறியும். ஆனால் ஓரிரு தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். யார் யார் பணப்பட்டுவாடா செய்தார்கள் என்ற குற்றம்சாட்டப்பட்டதோ அவர்களே மறுபடியும் தேர்தல் களத்தில் போட்டியிட்டார்கள். அதனை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை.
தேர்தல் முறையில் மாற்றம்
அதனால், தேர்தல் முறையின் அடிப்படையில் சில மாற்றங்களை செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று மக்களை சந்திக்கும் நடைமுறைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். அதற்கு பதிலாக முக்கிய இடங்களில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் வேட்பாளர்களை அனுமதிக்கலாம்.
ஆணையம் என்ன செய்தது?
தொகுதியில் வெளியூர் ஆட்கள் யார் என்பது குறித்து அடையாளம் காணப்பட்டாலும் அவர்களை தேர்தல் ஆணையத்தால் அப்புறப்படுத்த முடியவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்களாக இல்லை என்றால் அவர்களை ஏன் கைது செய்யக் கூடாது. வாக்காளர் அல்லாத தொகுதியைச் சாராத மற்றவர்களை அப்புறப்படுத்தக் கூட தேர்தல் ஆணையத்தால் முடியவில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது.
தேர்தல் செலவு
தேர்தல் செலவு செய்வது தொடர்பாக ஒரு முறை உள்ளது. சட்டமன்ற தேர்தல் என்றால் 35 லட்சம் ரூபாய் வரை தேர்தல் செலவு செய்யலாம் என்று சொல்கிறது தேர்தல் ஆணையம். வேட்பாளர் கொடுக்கும் கணக்கிற்கும், தேர்தல் ஆணையம் பதிவு செய்யக் கூடிய கணக்கிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்ற அளவில் வேறுபாடு இருக்கிறது. இதனை தவிர்க்க தேர்தல் ஆணையம் சில துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும்.
பாஜக தலையீடு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் பாஜகவின் தலையீடு இருக்கிறது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் முன்பே பாஜக தலைவர்கள் அதனை அறிவித்தார்கள். அது எப்படி இவர்களுக்கு தெரியும் என்ற கேள்வி எழுந்தது என்றாலும் அவர்களிடம் இருந்து பதில் எதுவும் இல்லை என்று திருமாவளவன் கூறினார்.