வகுப்புவாத சக்திகள் அவதூறு பரப்புகின்றன... திருமாவளவன் கண்டனம்!
தன் மீதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீதும் கலங்கம் சுமத்தும் உள்நோக்கத்தோடு அவதூறு பரப்பும் விதமாக வகுப்புவாத சக்திகள் பேசி வருவதாக திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை : தன் மீதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீதும் கலங்கம் சுமத்தும் உள்நோக்கத்தோடு அவதூறு பரப்பும் விதமாக வகுப்புவாத சக்திகள் பேசி வருவதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்து கோவில்கள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இந்து அமைப்புகளும், பாஜகவினரும் அவர் மீது புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் திருமாவளவன் இது குறித்து ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அதில்
டிசம்பர் 6ஆம் தேதியை 'தலித் மற்றும் இசுலாமியர் எழுச்சி நாள்' என ஒவ்வொரு ஆண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடைபிடித்து வருகிறோம். இந்த ஆண்டு அதையொட்டிய பொதுக்கூட்டம் சென்னையில் ஜமாலியா என்னும் இடத்தில் நடைபெற்றது.
நான் பேசியதில் முன்னே இருந்த பகுதியையும் பின்னால் இருந்த பகுதியையும் வெட்டிவிட்டு இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்று நான் கூறியதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பி உள்ளனர். இது என் மீதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் கலங்கம் சுமத்தும் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டுள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
கூட்டுச்சதி
இந்நிலையில் என்னையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் அவதூறு செய்யும் விதமாக வகுப்புவாத சக்திகள் பேசி வருகின்றன. அவர்களுடைய கூட்டுச்சதியின் காரணமாகத்தான் எனது பேச்சு வெட்டிசிதைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டதோ என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.
திரித்து வெளியிடப்பட்டுள்ளது
ராமர் கோவில் இருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே, அதை இடித்து விட்டு அங்கே மீண்டும் இராமர் கோவிலை கட்டப்போகிறோம் என வகுப்புவாதிகள் பேசி வருகின்றனர். இந்த வாதம் சரிஎன்றால் பவுத்த சமண கோவில்களை இடித்து அந்த இடங்களில் தான் சிவன் கோவில்களும் பெருமாள் கோவில்களும் கட்டப்பட்டுள்ளன. அங்கே மீண்டும் பவுத்த விகார்களை கட்டுவோம் என கூறமுடியுமா இந்த கேள்வியை தான் நான் எழுப்பினேன். அதை தான் திரித்து வெளியிட்டு இருக்கிறார்கள்.
செய்தி அடிப்படையிலேயே
காஞ்சி காமாட்சி கோவில் என்பது முன்னர் தாராதேவி கோவிலாக இருந்தது என்றும் திருப்பதி எழுமலையான் கோவில் முன்னர் புத்தர் கோவிலாக இருந்தது என்றும் வராலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதுபோலவே தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களிலும் பவுத்த அடையாளங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளனர். இந்த செய்திகளின் அடிப்படையிலேயே எனது கேள்வியை நான் எழுப்பினேன்.
வன்முறை களமாக மாற்ற
இப்போது கோவில்கள் இருக்கும் இடத்தில் மீண்டும் பவுத்த விகார்களை கட்ட வேண்டும் என்று சொல்வது எப்படி பொருத்தமற்ற வாதமோ அப்படித்தான் பாபர்மசூதியை இடித்துவிட்டு அங்கே ராமர் கோவில் கட்டவேண்டும் என்று சொல்வதும் ஆகும். இதைதான் நான் சுட்டிக்காட்டினேன். எனது பேச்சை திரித்து அரசியல் லாபம் தேட வகுப்புவாதிகள் முற்படுவது தமிழ்நாட்டை எப்படியாவது ஒரு வன்முறை களமாக மாற்றிவிட வேண்டும் என்ற அவர்களுடைய நோக்கத்தை தான் வெளிப்படுத்துகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்து அமைப்பின் அறிவிப்பிற்கு கண்டனம்
இதனிடையே இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்று பேசிய விசிக தலைவர் திருமாவளவன் தலையை வெட்டி கொண்டு வருபவருக்கு ரூ. 1 கோடி பரிசு தரப்படும் என்று இந்து முன்னேற்ற கழகம் என்ற அமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
காவல்துறை கைது செய்ய வேண்டும்
இது குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப்பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி ட்விட்டரில் கூறியுள்ளதாவது : "திருமாவளவன் ஒரு வாதத்திற்காக பேசியதை திரித்து வெளியிட்ட ஊடகத்தின் பொய்யான செய்தியை வைத்து திருமாவளவன் தலைக்கு பரிசு அறிவித்தவரை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். திருமாவளவன் பேசியதை பொறுப்பற்ற முறையில் திரித்து வெளியிட்ட ஊடகங்கள் வெட்கப்படவேண்டும் என்றும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.