கிரிமினல்களுடன் காவல்துறை சிறைத்துறை அதிகரிகள் கூட்டணி- திருமாவளவன்
சென்னை: சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் பெருகிவரும் குற்றங்களுக்கு காவல்துறை,சிறைத் துறை,கிரிமினல்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் இடையே எற்பட்டுள்ள கூட்டணியே முதன்மையான காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சுவாதி கொலை, ராம்குமார் மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் கோரிக்கை விடுத்துள்ள திருமாவளவன், சிறைத்துறை நிர்வாக முறைகேடுகளை விசாரிக்க பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட் விசாரணை என்பது கண்துடைப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ராம்குமார் மரணம்
சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி கடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24ம் தேதி படுகொலை செய்யப்பட்டார் . இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று அவருடைய ஜாமீன் மனு மீதான விசாரணை நடக்க இருந்த சூழலில், சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
ராம்குமார் மரணம் தொடர்பாக தமிழ்நாடு மனித உரிமை ஆணையமும் விசாரித்து வருகிறது.
விசாரணைக்குழு
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கைது செய்யப்பட்ட நேரத்தில் ராம்குமார், கழுத்தை அறுத்த மர்மமே விலகாத நிலையில் மிகுந்த பாதுகாப்பு கொண்ட நவீனமான முறையில் கட்டப்பட்ட புழல் சிறையில் திடீரென தற்கொலை செய்துகொண்டுவிட்டதாக கூறுவதை எவராலும் நம்ப முடியாது.
நம்பமுடியவில்லை
ராம்குமார் தற்கொலை செய்துகொண்டது உண்மையாக இருந்தால், அவரது வழக்கறிஞர் தொலைபேசியில் கேட்டபோது, ராம்குமார் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாததால் வாந்தியெடுத்தார் என்ற தவறான தகவலை ஏன் சிறை நிர்வாகம் கூறவேண்டும்? இன்னும் ஒருசில நாட்களில் ராம்குமாரின் பிணைக்கான மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் இப்படித் திடீரென அவர் இறந்திருப்பது பலத்த சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. '
அரசு பொறுப்பேற்குமா?
சிறைச்சாலையில் நடக்கும் எந்தவொரு தவறுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். தண்டனைக் கைதியோ விசாரணைக் கைதியோ உயிர் வாழ்வதற்கான அவரது அடிப்படை உரிமையைப் பாதுகாக்கவேண்டியது சிறை அதிகாரிகளின் பொறுப்பு' என நீலாவதி பெஹரா எதிர் ஒரிசா மாநில அரசு ( 1993) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சிறை அதிகாரிகள்
சட்டத்தின் நோக்கம் பொது அதிகாரத்தை சீர்திருத்துவது மட்டும் அல்ல, தமது நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்கிற சட்ட அமைப்பின்கீழ் தாங்கள் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதுதான்' எனவும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை புழல் சிறை அதிகாரிகள் மதிக்கவில்லை. தமிழக அரசாங்கமும் சிறையில் இருப்போரின் நலன் குறித்து கவலைப்படவில்லை. அதைத்தான் ராம்குமாரின் மர்ம மரணம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சிறைச்சாலை மரணங்கள்
தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கடந்த சில ஆண்டுகளாகவே ஏராளமான மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. 2014-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சிறை நிர்வாகம் தாக்கல் செய்த பதில் மனுவில் 2000 முதல் 2013ம் ஆண்டுக்கும் இடையே 1,155 பேர் தமிழக சிறைகளில் மரணம் அடைந்துள்ளனர் எனக் கூறியுள்ளது. அதாவது நான்கு நாட்களுக்கு ஒருவர் தமிழக சிறைகளில் மரணம் அடைகிறார். இது இந்திய அளவில் மிகவும் அதிகம்.
விசாரணைக்குழு
சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் பெருகிவரும் குற்றங்களுக்கு காவல்துறை,சிறைத் துறை,கிரிமினல்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் இடையே எற்பட்டுள்ள கூட்டணியே முதன்மையான காரணமாகும். அண்மையில் சிறைக்குள் பேரறிவாளன் தாக்கப்பட்டிருப்பது இதற்கொரு சான்று. ராம்குமார் மர்ம மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்படும் விசாரணைக் குழு காவல்துறை,சிறைத் துறை,கிரிமினல்களின் கூட்டணி குறித்தும் விசாரிக்கவேண்டும். அதற்கேற்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கவேண்டும் எனவும் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.