லஞ்சம் வாங்க தயாராக இருந்த தேர்தல் அதிகாரி யார்.. சிபிஐ விசாரிக்கணும்.. திருமாவளவன் ஆவேசம்: வீடியோ
இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் வாங்கத் தயாராக இருந்த தேர்தல் அதிகாரி யார் என்பது பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரியுள்ளார்
மதுரை: இரட்டை இலை சின்னத்தைப் பெற தினகரன் லஞ்சம் கொடுத்தால் அதை வாங்கத் தயாராக இருந்த தேர்தல் அதிகாரி யார் என்பது குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரியுள்ளார்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
லஞ்சம் கொடுக்க தயாராக இருந்த டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றால் லஞ்சம் வாங்கத் தயாராக இருந்த அதிகாரி யார்? அவர்களை ஏன் விசாரிக்கவில்லை? அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?
தினகரன் லஞ்சம் கொடுத்தார் என்றால் அது தமிழ்நாட்டளவில் பாதிக்கப்படும். ஆனால் தேர்தல் ஆணையம் ஊழல் மயமாகியுள்ளது என்றால் அது இந்தியாவிற்கே பெரும் தீங்கு. தேர்தல் ஆணையத்தில் நடந்திருக்கும் ஊழலை சிபிஐ விசாரிக்க ஆணையிட வேண்டும்.
கொடநாடு காவலாளி கொலைக்கு பின்னர் அடுத்தடுத்து நிகழ்ந்திருக்கின்ற சம்பவங்கள் பல்வேறு சந்தேகங்களுக்கு இடம் அளிக்கிறது. எனவே, இதுகுறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு விசாரித்தால் உண்மை வெளிவராது என்று திருமாவளவன் கூறினார்.