வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.5000 கோடி நிவாரணம் வழங்க திருமாவளவன் கோரிக்கை
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிப்பதுடன், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக முதல் தவணையாக ரூ.5000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால், கேரளா மாநிலமே வெள்ளத்தில் மிதக்கிறது. கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழதுள்ளனர். இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், ''கேரளாவில் தொடர் மழை காரணாமாக வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இடுக்கி, பாலக்காடு உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதுவரை சுமார் 40 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவ வேண்டியது மனிதநேயமுள்ள ஒவ்வொருவரின் கடமையுமாகும். இந்தப் பேரிடர் பாதிப்பு சூழலில் மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் தேவையான உதவிகளை கேரள அரசுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். இந்நிலையில் அண்டை மாநில அரசுகளும் தனிநபர்களும் கேரள அரசுக்கு உதவி செய்து வருகின்றனர். தமிழக அரசு ரூபாய் 5 கோடி அளித்துள்ளது. ஆனால், மத்திய அரசு இன்னும் நிவாரணத் தொகை எதையும் அறிவிக்கவில்லை.
ஓக்கி புயல் தாக்கிய போது பாராமுகமாக இருந்தது போல இப்போதும் மத்திய அரசு இருந்துவிடக்கூடாது. கேரளாவைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிப்பதுடன், உடனடியாக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5000 கோடியை முதல் தவணையாக கேரள அரசுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
கேரளாவுக்கு ரூ.5 கோடி உடனடியாக நிதியுதவி அளித்த தமிழக முதல்வருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.