காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த திருமாவளவன் கோரிக்கை
சென்னை: தாம் போட்டியிட்ட காட்டுமன்னார் கோவில் சட்டசபை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடிதம் அனுப்பியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியிலும் கூட அக்கட்சி வெல்லவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டார். இத்தொகுதியில் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
இந்த நிலையில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு திருமாவளவன் இன்று கடிதம் அனுப்பியுள்ளார். அத்துடன் களியமலை 81-வது வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்தவும் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
|
வாக்கு இயந்திரம் பழுது
இது தொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த 19.05.2016 அன்று நடைபெற்ற காட்டுமன்னார்கோயில் தொகுதி 6வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது களியமலை கிராமத்தில் வாக்குசாவடி எண் 81ல் பயன்படுத்தப்பட்ட வாக்குபதிவு இயந்திரம் பழுதானது (இயந்திரம் எண்-L14732). வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கையை அந்த இயந்திரம் காட்டவில்லை. 16.05.2016 அன்று நடைபெற்ற வாக்குப்பதிவின் போதும் அந்த வாக்கு பதிவு இயந்திர இயங்காததால் வாக்குபதிவு தாமதமாக நடந்திருக்கிறது.
விடைதெரியாமல் வாக்கு எண்ணிக்கை...
பழுதான இயந்திரத்திற்கு விடை தெரியாமல் வாக்கு எண்ணிகையை தொடரக்கூடாது என எமது கட்சி பொறுப்பாளர்கள் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர். தேர்தல் அதிகாரி அந்த பழுதான இயந்திரத்திலிருந்து காகிதத்தில் அச்சு எடுத்து வாக்குஎண்ணிக்கையை காட்டியுள்ளார். வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானால் அந்த குறிப்பிட்ட வாக்குசாவடியில் மறுவாக்குபதிவு நடத்த உத்தரவிடாமல், பழுதான இயந்திரத்திலிருந்து வெளியான அச்சுபிரதியை தேர்தல் அதிகாரி எப்படி ஏற்றுக்கொண்டார்? அதை பதிவான மொத்த வாக்குகளில் எப்படி சேர்த்தார்?
தபால் வாக்குகள் நிராகரிப்பு
101 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார். தேர்தல் அதிகாரி தனது கடமையை சரியாக செய்திருந்தால் போட்டியிட்ட வேட்பாளர்களை விட நான் அதிக வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றிருப்பேன். தேர்தல் அதிகாரிக்கான கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி மறுவாக்கு எண்ணிகையை தேர்தல் அதிகாரி நடத்தி இருக்கலாம்.
மறுவாக்கு எண்ணிக்கை தேவை
மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்ற எமது கோரிக்கையை தேர்தல் அதிகாரி உள்நோக்கத்துடனே புறந்தள்ளியதாக தெரிகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காட்டுமன்னார்கோயில் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமெனவும், களியமலை கிராமத்தில் வாக்குசாவடி எண்:81ல் வாக்குப்பதிவு இயந்திரம் எண்-L14732 பழுதானதால் தேர்தல் அதிகாரிக்கான கையேட்டில் உள்ளபடி அந்த வாக்குசாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்திட வேண்டுமெனவும் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் சைதி அவர்களுக்கும், தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அவர்களுக்கும் இன்று (30.05.2016) மனுஅளித்துள்ளேன்.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.