விவசாய தொழிலாளர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம்: திருமாவளவன்
தமிழக அரசின் வறட்சி மாநில அறிவிப்பில் விவசாய தொழிலாளர்களுககு எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்திருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் விவசாய தொழிலாளர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தை இன்று வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்தார். அதில் விவசாயத்தை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவான எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.
இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வறட்சி மாநில அறவிப்பு காலம் கடந்த அறிவிப்பு என்றாலும் மகிழ்ச்சியே எனக்கூறினார். விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிப்பதாக கூறிய திருமாவளவன் பயிர்க்கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கும், விளை நிலத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு திருப்தி அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் விவசாயத்தை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு எந்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை உடனடியாக சந்தித்து வறட்சி நிவாரணம் பெற வேண்டும் திருமாவளவன் வலியுறுத்தினார். மேலும் இதுதொடர்பாக முதல்வர் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்றும் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.