முதல்வரை கட்டாயப்படுத்தி ராஜினமா செய்யச் சொல்வதா? - திருமாவளவன், ஜி.கே.வாசன்,சீமான்
கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யச் சொன்னார்கள் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியது ஆச்சரியத்தை அளிக்கிறது என்று திருமாவளவன், ஜி.கே.வாசன். சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் கூறியுள்ளனர்.
சென்னை: தமிழகத்தின் இன்றைய நிலைக்கு காரணம் அதிமுகதான் என்று ஓ.பன்னீர் செல்வத்தின் பேட்டி பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சசிகலாவிற்கு எதிராகவும், அமைச்சர்களுக்கு எதிராகவும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கொளுத்திப் போட்ட பட்டாசு மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யச் சொன்னார்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன், இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்று கூறினார். எந்த வித குமுறலும் இன்றி முதல்வராக சசிகலாவை ஒ.பன்னீர் செல்வமே முன்மொழிந்தார். இப்போது அவர் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார் என்றார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் பேட்டி பற்றி கருத்து கூறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே. வாசன், தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம் என்றார். நடந்தது என்ன என்பதை மக்களுக்கு விளக்கியுள்ளார் என்றும் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இதே போல நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், பன்னீர் செல்வம் அவர்கள் தனது மனச்சாட்சிக்கு நேர்மையாக பேசியுள்ளார் என்றார். அவர் பாஜகவினரைப் பற்றி கூறவில்லை. ஆனால் தன்னை கட்டாயப்படுத்தியவர்களைப் பற்றி நிர்பந்தப்படுத்தியவர்களைப் பற்றியும் கூறியுள்ளார் என்றார்.