கருணாநிதிக்கு எனது இதயம் கணிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்... திருமாவளவன்
சிதம்பரம்: மக்கள் நலக் கூட்டணியின் முக்கியக் கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக தலைவர் கருணாநிதிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தான் போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் தோல்வியைத் தழுவிய காட்டுமன்னார்கோவில் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்த திருமாவளவன் முன்னதாக சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாளை பிறந்த நாள் காணும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு என் இதயம் கணிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் சட்ட விரோதமாக நடந்துள்ளது. ஒரு தொகுதிக்கு ரூபாய் 28 லட்சம்தான் செலவு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு தொகுதிக்கு ரூபாய் 28 கோடி செலவு செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி மட்மல்லாமல் தமிழகம் முழுவதும் விதி மீறல் நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். அதிமுக, திமுக சட்ட விரோதமாக பணப்பட்டுவாடா செய்திருக்கிறது. புகார் கொடுத்தாலும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.
48363 வாக்குகள் காட்டுமன்னார்கோவிலில் எனக்கு கிடைத்துள்ளது. இது நேர்மையாக செலுத்திய வாக்குகள். தொகுதியில் உள்ள 81வது வாக்குச்சாவடியான கலியமலையில் வாக்குப் பதிவு இயந்திரம் இயங்கவில்லை. தாமதமாக ஆரம்பித்தனர். வாக்கு எண்ணிக்கையின்போதும் அந்த இயந்திரத்தில் எதுவும் தெரியவில்லை. அதிகாரிகள் இரண்டு மணி நேரம் அப்படியே வைத்திருந்தனர். பின்னர் இத்தனை வாக்குகள் பதிவானது என்று பேப்பரில் எழுதி காண்பித்தனர். ஆகையால் அந்த 81வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்.
காட்டுமன்னார்கோவிலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள், அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளன. தபால் ஓட்டுக்களை கணக்குகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. தேர்தலில் மனச்சாட்டிப்படி நடந்து கொண்டதாக லக்கானி கூறியிருக்கிறார். அதிமுகவுக்கு ஆதரவாக லக்கானி மனச்சாட்சிப்படி நடந்து கொண்டிருக்கிறார் என்றார் திருமாவளவன்.