தேர்தலில் ரவிக்குமார் போட்டியிடாதது ஆழமாய் வலிக்கிறது: தொல். திருமாவளவன்
சென்னை: சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பொதுச்செயலர் ரவிக்குமார் போட்டியிடாதது ஆழமாய் வலிக்கிறது என்று அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவனும் ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து கல்வியாளர் வசந்திதேவியும் போட்டியிடுகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் மாநில நிர்வாகிகள்.
இவர்களில் மாநில பொதுச்செயலரான ரவிக்குமார் மட்டுமே போட்டியிடவில்லை. அவர் காட்டுமன்னார்கோவில் தவிர வேறு எந்த ஒரு தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரவிக்குமார் தேர்தலில் போட்டியிடாதது குறித்து தொல். திருமாவளவன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக முனைவர் வசந்திதேவி அவர்கள் போட்டியிட முன்வந்திருப்பது நமக்குமட்டுமல்ல நம் கூட்டணிக்கே பெருமையாகும்.
அவரை வேட்பாளர் ஆக்குவதற்கு பெரும்பங்காற்றிய தோழர் ரவிக்குமார் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.
இந்த தேர்தலில் அவர் போட்டியிடாதது ஆழமாய் வலிக்கிறது.
இவ்வாறு தொல். திருமாவளவன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.