மதுக்கடைகளை மூடுங்கள்... முழக்கமிட்ட திருமா, ஜவாஹிருல்லா, முத்தரசன், ஜி.ரா., கைது
சென்னை: ஏழை, எளிய மக்களின் உயிரைக்குடிக்கும் மதுக்கடைகளை மூடுங்கள் என்று மயிலாப்பூரில் பேரணியாக சென்று மக்கள் முன்பு பேசிய திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கைச் செயல்படுத்தக் கோரி இன்று நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்துக்கு ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுத்த வேண்டுகோளை ஏற்று, காங்கிரஸ் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை, புதிய தமிழகம் உள்பட் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மயிலாப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா ஆகியோர் பேரணியாக சென்றனர்.
மக்களிடம் மதுவின் தீமைகளைப் பற்றி எடுத்துக்கூறியதோடு, திறக்கப்பட்டிருந்த கடைகளை மூடுமாறு வலியுறுத்தனர். மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் பகுதியில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோரும் தொண்டர்களும் பங்கேற்றனர்.
அப்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், வரும் 10ம் தேதி திமுகவினர் மதுவிற்கு எதிராக ஆர்பாட்டம் நடத்துவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் இன்றைய போராட்டத்திற்கு திமுகவினர் ஆதரவு தரவில்லை. எனவே மதுவிலக்கு தொடர்பான திமுகவின் நிலைப்பாடு மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக விமர்சித்தார்.