பாஜகவின் ராஜதந்திரத்தை முறியடிக்க சரியான தேர்வு மீராகுமார்: திருமாவளவன்
சென்னை: பாஜகவின் ராஜதந்திரத்தை முறியடிக்க சரியான தேர்வாக மீராகுமார் இருப்பார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த வேட்பாளாராக களமிறக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டு பா.ஜ.க. ஆதரவு கோரியது. பிரதமர் மோடியும் தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநில முதல்வர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரியிருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் எதிர்கட்சிகள் சார்பில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திமுக சார்பில் கனிமொழி எம்.பி., உள்ளிட்ட 14 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட எதிர்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மீராகுமார் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் இவர் முன்னாள் துணைப் பிரதமர் ஜெகஜீவன் ராமின் மகளும் ஆவார். சட்டம் பயின்றுள்ள மீராகுமார், இந்திய தூதரக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீராகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாஜகவின் ராஜதந்திரத்தை முறியடிக்க மீராகுமார் சரியான தேர்வாக இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.