பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கையை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த வேண்டும்.. திருமா ஆவேசம்
ராமேஸ்வர மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த அட்டூழியத்தைச் செய்த இலங்கையிடம் சர்வதேச நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி திருமாவளவன் போராட்டம் நடத்தினார்.
சென்னை: ராமேஸ்வர மீனவர் மீதான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து விசிக சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் திருமாவளவன் போராட்டம் நடத்தினார்.
ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் நேற்று முன் தினம் நடுகடலில் சுட்டுக் கொன்றனர். இலங்கை கடற்படையின் இந்த அராஜகப் போக்கிற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் மீனவர்கள் அமைப்பு சார்பில் பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அரசின் அராஜகப் போக்கை கண்டித்து பேசிய திருமாவளவன், இலங்கை மீது சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இந்தப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டு இலங்கை அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.