மோடியின் 'தலித்' பேச்சு.... ரவிக்குமாருக்கு திருமாவளவன் ஆதரவு!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தலித்துகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தலித்துகள் தாக்கப்படுவதை ஏற்க முடியாது; தலித்துகளைத் தாக்குவதற்கு பதிலாக என்னை சுட்டுக் கொல்லுங்கள் என்பது பிரதமர் மோடியின் அண்மைய பேச்சு. இதற்கு பிரதமர் மோடியை இந்துத்துவா அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
அதே நேரத்தில் மோடியின் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் ரவிக்குமார் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலர் ஆளூர் ஷாநவாஸ் மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க பஞ்சாயத்து நடைபெறுகிறது.
இந்த நிலையில் ரவிக்குமாருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக திருமாவளவன் கூறுகையில், மோடியின் பேச்சை குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக பார்க்கிறோம்.
என்னைத் தாக்குங்கள் என்று சொல்வதன் மூலம் தலித்துகள் மீதான தாக்குதலை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதை ஆதரித்து ரவிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
இப்படி ஆதரிப்பது சரியா என எங்கள் கட்சியில் ஒரு பிரிவினர் கருத்து சொல்லியிருக்கின்றனர். எங்கள் கட்சியின் ஜனநாயகத்தன்மையை இது காட்டுகிறது.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.