ரஜினிகாந்தை இலங்கைக்கு போக வேண்டாம் என ஏன் சொன்னோம்? திருமா,வேல்முருகன், முத்தரசன் கூட்டாக விளக்கம்
நடிகர் ரஜினிகாந்த் ஏன் இலங்கைக்கு செல்லக் கூடாது என்று வலியுறுத்தினோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் விளக்கினார். மேலும், வேண்டுகோளை ஏற்று இலங்கைக்கு செல
சென்னை: லைக்கா நிறுவனம் நடத்தும் விழாவிற்கு செல்ல வேண்டாம் என்ற வேண்டுகோளை ஏற்று இலங்கை செல்லாமல் நிறுத்திய நடிகர் ரஜினி காந்த்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
லைக்கா நிறுவனம் குறித்தும், ரஜினி காந்த் விழாவிற்கு போக வேண்டாம் என்று ஏன் வேண்டுகோள் விடுக்கப்பட்டது என்பது குறித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நடிகர் ரஜினி காந்த் இலங்கை பயணத்தை தவிர்ப்பது நல்லது என்று கோரிக்கை வைத்தோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றுதான் இந்தக் கோரிக்கையை வைத்தோம். எங்கள் கருத்தை குதர்க்கமாக நடிகர் ரஜினி காந்த் புரிந்து கொள்ளவில்லை.
ரஜினிகாந்த் வேண்டுகோள்
நாங்கள் விடுத்த வேண்டுகோளுக்கு பதில் வேண்டுகோளாக ரஜினி காந்த் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். வருங்காலத்தில் "நான் ஈழம் செல்லுவேன். அப்போதும் என்னை எதிர்க்காதீர்கள்" என்று ரஜினி காந்த் கேட்டுக் கொண்டார்.
ஈழமக்களுக்காக..
இன்றைக்கு நாங்கள் மூன்று கட்சிகளின் சார்பில் ரஜினி காந்த்திற்கு வேண்டுகோள் விடுக்கிறோம். நீங்கள் பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதற்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்ப்பதற்கும் என்றைக்கு வேண்டுமானாலும் இலங்கைக்கு செல்லலாம். அங்கிருக்கும் மக்கள் உங்களை வரவேற்க தயாராக இருக்கிறார்கள். நாங்களும் அதனை எதிர்க்கப் போவதில்லை.
சூழல் சரியில்லை
ஆனால், இலங்கையில் இப்போதிருக்கும் சூழல் சரியில்லை. தற்போதுள்ள அரசியல் சூழலில் மக்கள் அங்கே கொந்தளித்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருக்கலாம். அதனால் ரஜினி காந்த்திற்கு தெரியாமல் இருக்கலாம்.
ராணுவம் அச்சுறுத்தல்
இலங்கையில் ஆறு தமிழர்களுக்கு ஒருவர் என்ற முறையில் சிப்பாய்களை வைத்து ராணுவம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இன்றைக்கும் இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
ஆதரவற்ற பெண்கள்
ஒரு லட்சம் பெண்கள் கணவர்களை இழந்து வாழ்வாதாரத்திற்கே போராடி வருகிறார்கள். அவர்களை ராணுவம் தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குடியிருப்புகளை ராணுவம் பிடிங்கிக் கொள்கிறது. அவர்கள் வளங்களை இழந்துள்ளனர்.
அராஜக மைத்ரி
இன்றும் வதை முகாம்கள் விலக்கப்படவில்லை. ராணுவ நிலைகள் இன்னும் அப்புறப்படுத்தப்படாமல் இருக்கின்றன. ராணுவ முகாம்களை கணிசமாக குறைத்துக் கொள்கிறோம் என்று அரசு வாக்குறுதி அளித்தார்களே தவிர வாபஸ் பெறப்படவில்லை. ஆக, ராஜபக்சே காலத்தை விட மிக மோசமாக மைத்ரி பால சிறிசேனா ஆட்சியில் தமிழர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அரசியல் காரணம்
அப்படிப்பட்ட மைத்ரி பால அரசோடு உறவு கொண்டாடுகிற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பிக்கள் லைக்கா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இதனாலும் இலங்கை தமிழர்கள் அச்சம் தெரிவித்தனர். ஆக, இதுபோன்ற காரணங்களால்தான் நாங்கள் ரஜினி காந்த்தை இலங்கைக் செல்லக் கூடாது என்று வேண்டுகோள் வைத்தோமே தவிர வேறு எந்த காரணமும் கிடையாது.
லைக்கா யார்?
இந்த இடத்தில்தான் லைக்கா நிறுவனத்தின் பெயரை நாங்கள் சொல்ல நேர்ந்தது. லைக்கா நிறுவனம் யார் என்பதும் அவர்கள் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதும் மக்களுக்கு தெரியும். அதனை நாங்கள் நாங்கள் சொல்ல விரும்பவில்லை. லைக்கா நிறுவனத்தினர் என்ன வதந்தி பரப்பினாலும் அதுபற்றி எங்களுக்கு கவலையும் இல்லை. ஆனால், ரஜினிகாந்த்திற்கு அழைப்பு விடுத்ததுள்ள லைக்கா நிறுவனம், இந்த வீடுகளை கட்டுகிற போது இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகாவை வைத்துதான் அடிக்கல் நாட்டினார்கள் என்பது கூடுதலான தகவல்.
ரஜினிக்கு நன்றி
இந்த அரசியல் எல்லாம் ரஜினி காந்த்திற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, நாங்கள் வேண்டுகோள் வைத்தோம். அவர் எங்களது வேண்டுகோளை ஏற்று உடனடியாக தான் செல்லவில்லை என்பதை அவர் அறிவித்திருக்கிறார். அவருடைய முதிர்ச்சியான இந்த அணுகுமுறைக்கு எங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று திருமாவளவன் கூறினார்.