பழங்குடி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு... வனத்துறையினரை கைது செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்
தேனி: தேனி அருகே பளியர் இன பழங்குடி பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த வனத்துறையினரை கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகில் உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பளியர் இன மக்கள் வனப்பகுதியில் தேன் மற்றும் நன்னாரி வேர்கள் எடுக்கச் சென்றனர். அவர்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் பெண்கள் சிலரை ஆடைகளை கலைந்து பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று தேனி பங்களா மேடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விசாரணை நடத்தவில்லை
முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வனப்பகுதியில் தேன் எடுக்கச் சென்ற 5 பெண்களை வனத்துறையினர் ஆடைகளை கலைந்து சோதனை செய்துள்ளனர். இதில் 13 வயது சிறுமி ஒருவரும் பெற்றோர் கண் முன்னே பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தவில்லை.
6 பேரை விடுதலை செய்ய வேண்டும்
வழக்கை திசை திருப்பும் முயற்சியில் பழங்குடியின மக்கள் வன அலுவலகத்தை சூறையாடியதாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்ட 6 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
கைது செய்ய வேண்டும்
புகாருக்கு உள்ளாகி உள்ள வனத்துறையினர் தற்போது பெயரளவுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் தலித் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அப்படியே இருக்கும் பழங்குடிகள்
பழங்குடி இன மக்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார்களோ அதே நிலையில்தான் தற்போதும் உள்ளனர். வனத்தை நம்பியே வாழும் அவர்கள் எப்போதும் வனத்தை சூறையாட மாட்டார்கள். அங்கு சூறையாடுவதும், வேட்டையாடுவதும் சட்ட விரோத செயல்களை செய்வதும் வனத்திற்கு சம்பந்தமில்லாத நபர்கள்தான்.
மனித உரிமை ஆணையத்திடம்...
பழங்குடி இன மக்கள் வனத்தில் தேன் மற்றும் வேர் சேகரிக்க செல்வது ஜனநாயக கடமையாகும். பாதிக்கப்பட்ட பழங்குடி இன பெண்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இந்த பிரச்சினையில் அதிகாரிகளை காப்பாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட கூடாது. உரிய விசாரணை நடைபெறாவிட்டால் மனித உரிமை ஆணையத்தை அணுகுவோம்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.