இரட்டை இலைக்காக லஞ்சத்தை வாங்க இருந்த தேர்தல் அதிகாரி யார்… சிபிஐ விசாரணை கோருகிறார் திருமாவளவன்
இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் வாங்கத் தயாராக இருந்த தேர்தல் அதிகாரி யார் என்பது பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரியுள்ளார்.
மதுரை: இரட்டை இலை சின்னத்தைப் பெற தினகரன் லஞ்சம் கொடுத்தால் அதை வாங்கத் தயாராக இருந்த தேர்தல் அதிகாரி யார் என்பது குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரியுள்ளார்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: மாநில சுயமாட்சி என்பது அனைத்து மாநிலங்களுக்குமான உரிமையாகும்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். இந்தத் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட உள்ளனர்.
பாஜக ஆத்திரம்
அய்யாகண்ணு, டெல்லியில் போய் போராடியதற்கு பின்னர் விவசாயிகளின் பிரச்சனை தேசிய பிரச்சனையாக மாறியிருக்கிறது. விவாதிக்கக் கூடிய விஷயமாகவும் மாறி இருக்கிறது. இதனால் பாஜகவைச் சார்ந்த சிலர் ஆத்திரப்படுகிறார்கள். அய்யாகண்ணு பற்றி அவதூறு பரப்புகிறார்கள். அவரின் போராட்டம் மிகவும் நியாயமானது.
அதிமுகவில் குழப்பம்
தமிழக அரசு செயல்பட முடியாத அளவிற்கு நெருக்கடியில் உள்ளது. குறிப்பாக அதிமுகவின் இரு அணிகளை உருவாக்கி அதன் மூலம் தமிழக அரசியலில் ஒரு குழப்பதை ஏற்படுத்த மத்தியில் ஆளும் பாஜக முயற்சி செய்து வருகிறது. இது பொதுமக்களால் பேசப்படும் விஷயமாகவே மாறிவிட்டது. தமிழக அரசு சுதந்திரமாக இயங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
கொடநாடு கொலை
கொடநாடு காவலாளி கொலைக்கு பின்னர் அடுத்தடுத்து நிகழ்ந்திருக்கின்ற சம்பவங்கள் பல்வேறு சந்தேகங்களுக்கு இடம் அளிக்கிறது. எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு விசாரித்தால் உண்மை வெளிவராது.
அதிகாரி யார்?
லஞ்சம் கொடுக்க தயாராக இருந்த டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றால் லஞ்சம் வாங்கத் தயாராக இருந்த அதிகாரி யார்? அவர்களை ஏன் விசாரிக்கவில்லை? அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?
சிபிஐ விசாரணை
தினகரன் லஞ்சம் கொடுத்தார் என்றால் அது தமிழ்நாட்டளவில் பாதிக்கப்படும். ஆனால் தேர்தல் ஆணையம் ஊழல் மயமாகியுள்ளது என்றால் அது இந்தியாவிற்கே பெரும் தீங்கு. தேர்தல் ஆணையத்தில் நடந்திருக்கும் ஊழலை சிபிஐ விசாரிக்க ஆணையிட வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.