திமுகவுக்கு போட்டி.. காங். தலைமையில் அணி உருவாக ராகுலிடம் திருமாவளவன் வலியுறுத்தினார்: ரவிக்குமார்
காங். தலைமையில் அணி உருவாக ராகுலிடம் திருமாவளவன் வலியுறுத்தினார்,
சென்னை; காங்கிரஸ் தலைமையில் அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும் என ராகுல் காந்தியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியாக அக்கட்சி பொதுச்செயலர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழல், கூட்டணி மாற்றங்கள் குறித்து நியூஸ் 7 தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் ரவிக்குமார் கூறியதாவது:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் திருமாவளவன் 5 நிமிடங்கள்தான் சந்தித்து பேசினார். இதில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தோம்.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் திருத்தத்துக்கு எதிராக முதன் முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி. அதற்காக ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்தோம்.
தமிழகத்தில் தேசத்தைக் காப்போம் என்கிற மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு ராகுல் காந்தியை அழைத்திருக்கிறோம். இம்மாநாட்டுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலினையும் அழைத்திருக்கிறோம்.
இத்துடன் காங்கிரஸ் கட்சியால்தான் மதச்சார்பற்ற சக்திகளை நாடு முழுவதும் ஒருங்கிணைக்க முடியும். ஆகையால் காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற சக்திகளை நீங்கள் ஒருங்கிணைக்க வேண்டும் என ராகுல் காந்தியிடம் திருமாவளவன் கேட்டுக் கொண்டார். இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறது. திமுக 3-வது அணியை உருவாக்க முயற்சிக்கிறது. இதனை நிராகரித்து போட்டியாக காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி உருவாக்கப்பட வேண்டும் என்பதை ராகுல் காந்தியிடம் திருமாவளவன் வலியுறுத்தியதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் ரவிக்குமார் உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதே விவாதத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் கோபண்ணா, திமுக தலைமையிலான 9 கட்சி கூட்டணி வலுவாகவே இருக்கிறது என கூறியுள்ளார்.