ஆணவக்கொலை, கூலிப்படை கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தீர்ப்பு... திருமாவளவன் கருத்து!
Recommended Video
சென்னை: உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு ஆணவக்கொலை, கூலிப்படை கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சங்கர் கொலை வழக்கில் இந்த தீர்ப்பு மிகப்பெரிய ஆறுதலை தந்திருக்கிறது. கூலிப்படை கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது. கவுசல்யாவின் நீண்ட நெடிய போராட்டத்திற்கு உறுதி கிடைத்திருக்கிறது.
உலகையே உலுக்கிய மிகப்பெரிய கொடூரமான படுகொலை இது. இந்தியாவே இந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தது. இதற்கு கூலிப்படையினரே முக்கியக் காரணம். இது வரையிலும் கூலிப்படையினருக்கு இவ்வளவு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது கிடையாது.
கூலிப்படை கலாசாரத்தை ஒழிக்கும்
இந்த முறை கூலிப்படையை சார்ந்த அனைவருக்கும் தூக்குதண்டனை அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தூக்கு தண்டனை, மரண தண்டனையை ஒழிப்போம் என்பது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை எனினும் ஆணவக் கொலைகளுக்கும், கூலிப்படை கலாச்சாரத்திற்கும் ஏற்ற தீர்ப்பு என்று கருதுகிறேன்.
சாதி, மதம் பெரிதல்ல
வறட்டு கவுரவத்தால் பிள்ளைகளின் உணர்வுகளை மதிக்காமல் தங்கள் விருப்பப்படி அவர்களை வாழ கட்டாயப்படுத்தும் பெற்றோருக்கு இது ஒரு பாடமாக இருக்கும். சாதி, மதத்தை உயர்வாக கருதும் பெற்றோருக்கு பாடம் புகட்டும் ஒரு தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது.
அரசு உறுதியோடு இருக்க வேண்டும்
எந்த முன்விரோதமும் இல்லாமல் பணம் வாங்கிக் கொண்டு ஒரு உயிரை துடிக்கத் துடிக்க வெட்டிக் கொல்லும் கூலிப்படை கலாச்சாரம் வேறோடு கிள்ளி எறியப்பட்ட தீர்ப்பு வழிவகுக்கும் என்று நினைக்கிறேன். இந்த தீர்ப்பை தக்க வைக்கும் விதமாகத் தான் தமிழக அரசு மேல்முறையீட்டு வழக்கையும் கொண்டு செல்ல வேண்டும்.
கவுசல்யாவிற்கு அரசு வேலை
கவுசல்யா இந்த வழக்கில் உறுதியோடு நின்று போராடுவதால் அதற்கு எதிர்ப்பு மேலும் அதிகரிக்கும். எனவே அவருக்கு எதிர் தரப்பிடம் இருந்து கவுசல்யாவிற்கு பாதுகாப்பு அளிப்பதோடு, அவருக்கு அரசு வேலையும் தர வேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.