மீண்டும் சிறையில் மயங்கி விழுந்தார் திருமுருகன் காந்தி.. வேலூர் மருத்துவமனையில் அனுமதி!
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சிறையில் இன்று திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
வேலூர்: மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சிறையில் இன்று திடீரென மயங்கி விழுந்ததால் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டுக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு கடந்த மாதம் ஆகஸ்ட் 9-ம் தேதி திரும்பினார். பெங்களூர் விமான நிலையம் வந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும் அவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே மயக்கம்
திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு ஒன்றரை மாதம் ஆகியுள்ள நிலையில் இரத்த அழுத்தம் குறைவு காரணமாக கடந்த 23ஆம் தேதி சிறையில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து கடந்த 24ஆம் தேதி காலை போலீசார் அவரை வேலூர் அருகே உள்ள அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
மீண்டும் மயக்கம்
பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை திருமுருகன் காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மீண்டும் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதி
இதைத்தொடர்ந்து அவருக்கு சிறையில் மருத்துவ பரிசோதனை அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் திருமுருகன் காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு
ஏற்கனவே தனது ஆரோக்கியமின்மை தொடர்பாக திருமுருகன் காந்தி, தன்னை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு மயிலாடுதுறை, ஆலந்தூர், எழும்பூர் போன்ற நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நீதிபதிகள் அனுமதி அளித்தும் போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லவில்லை. இதனிடையே திருமுருகன் காந்தி உயிருக்கு சிறையில் ஆபத்து இருப்பதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.