அர்னாபை அலறவைத்த திருமுருகன் காந்தி!
சென்னை: டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்சாமியை வசமாக ஒரு பிடி பிடித்து ஒரே நாளில் தேசம் முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஒரு தமிழர்..
அவர்... திருமுருகன் காந்தி. மே 17 இயக்கத்தின் தலைவர்.
ராஜீல் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டது மற்றும் அவர்கள் உள்பட சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது ஆகியவைதான் இன்று வட இந்திய ஊடகங்களால் பிரதானமாக பரப்புரை செய்யப்படுகின்றன.
வட இந்திய ஊடகங்கள்...
வட இந்திய ஊடகங்கள், குறிப்பாக டிவி சேனல்களில் விவாதம் என்ற பெயரில் அரங்கேற்றும் குழாயடிச் சண்டையில் இந்தத் தமிழர்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்கவே முடியாத சூழல் நிலவுகிறது.
நீதிமன்ற அவமதிப்பு
உச்ச நீதிமன்றத்தின் தூக்கு தண்டனை ரத்து தீர்ப்பை மிகக் கேவலமாக விமர்சித்துள்ளன டைம்ஸ் நவ் மற்றும் சிஎன்என் ஐபிஎன் ஆகியவை. குறிப்பாக அர்னாப் போடும் கூச்சல் சகிக்க முடியாதது. 'என் நாட்டு பிரதமரைக் கொன்றவர்களின் தூக்கு தண்டனையை எப்படி ரத்து செய்யலாம்' என்று மாரிலடித்துக் கொண்டு கேட்கிறார் அர்னாப். இது பச்சையான நீதிமன்ற அவமதிப்பு.
தலையிலடித்துக் கொண்ட ஜெத்மலானி
ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச நடுநிலைத் தன்மையே இல்லாத விவாதம் இது என மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உள்ளிட்டோர் தலையிலடித்துக் கொள்ளும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன இந்த விவாதங்கள்.
எது விவாதம்?
பொதுவாக இம்மாதிரி விவாதங்களில் பங்கேற்போரை முழுமையாகப் பேசவிட்டு, அவர்கள் சொல்ல வரும் கருத்துக்களைப் பெற்று, தேவையான இடத்தில் நிறுத்தி- மாற்றுக் கருத்து சொல்பவரைப் பேசவிடுவதுதான் நிகழ்ச்சி நடத்துபவர்களின் வேலை.
ஒரே கூச்சல் மயம்
ஆனால் அர்னாப் மற்றும் ராஜ்தீப் சர்தேசாய்கள் நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் இறுதி வரை கத்திக் கொண்டே இருக்கிறார்கள். பேச வந்தவர்கள் தங்களின் கருத்துக்களை அப்படியே ஏற்க வேண்டும் என்கிற மாதிரி இருக்கிறது இவர்கள் நடத்தை. இதன் விளைவு, அது விவாதக் களமாக இல்லாமல் குழாயடிச் சண்டை நடக்கும் இடமாகவே காட்சி தருகிறது.
நேற்றைய ஒரு விவாதத்தில், அர்னாப் கோஸ்சாமியின் பேச்சைப் பொறுக்க முடியாமல், விவாதத்திலிருந்தே வெளியேறினார் ராம் ஜெத்மலானி.
திருமுருகன் காந்தி
ஆனால் அந்த அர்னாபையே அலற வைத்த ஒருவர் நேற்று இன்னொரு விவாதத்தில் பங்கேற்றார். அவர்தான் மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி. அவர் கேட்ட எந்த கேள்விக்கும் அர்னாபிடம் விடையில்லை. கடைசியில் திருமுருகனைச் சமாளிக்க முடியாமல், அவர் மைக்கை ஆஃப் பண்ண மட்டும்தான் முடிந்தது அர்னாபால்.
இதோ திருமுருகன் காந்தி அர்னாபிடம் கேட்ட சில கேள்விகளும், அதற்கு அர்னாப் திரு திருவென விழித்ததும்....
பதில் சொல்லுங்க அர்னாப்:
திருமுருகன் காந்தி: மிஸ்டர் அர்னாப், காங்கிரஸ் எம்பி ராஜீவ் கொலை வழக்கில் எதற்காக மொத்த தேசத்தையும் திசை திருப்ப முயற்சிக்கிறீர்கள்... இந்தக் கொலையில் நேரடித் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு, ஆனால் இப்போது சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கும் சுப்பிரமணியன் சாமி, சந்திரா சாமியை ஏன் எந்த கேள்வியும் கேட்கவில்லை? ஜெயின் கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட இந்த இரு குற்றவாளிகளையும் ஏன் காப்பாற்றப் பாடுபடுகிறீர்கள்? வர்மா கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பாதுகாப்புக் குறைபாடுகள் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்?
அர்னாப்: இதற்கெல்லாம் நான் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. நான் சொல்வதை மட்டும் கேளுங்கள்..
மைக் பிடுங்கப்படும்...
திருமுருகன் காந்தி: ஆனால் நீங்கள் இந்த தேசத்துக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள் அர்னாப்...
அர்னாப்: ஒரு நிமிடம் நான் சொல்வதைக் கேளுங்கள்... அல்லது உங்கள் மைக் பிடுங்கப்படும்.
சுப்பிரமணிய சாமி
திருமுருகன் காந்தி: என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் யார்? இப்போது சிறையில் உள்ள ஏழு பேரும் அல்ல... இது விசாரணையில் தெரிந்துவிட்டது. ஆனால் உண்மையான குற்றவாளிகள் சந்திராசாமியும் சுப்பிரமணியசாமியும் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கிறார்கள்.
அர்னாப்: கீப் கொயட்... பேசாதீர்கள். இல்லாவிட்டால் உங்கள் மைக்கை செயலிழக்கச் செய்வேன்.
உங்களோடு விவாதிக்க முடியாது
திருமுருகன் காந்தி: ஜெயின் கமிஷன் அறிக்கை பற்றி நீங்கள் பேச மறுப்பதேன்? வர்மா கமிஷன் அறிக்கையைப் பற்றி வாயே திறக்கமாட்டேன் என பிடிவாதம் பிடிப்பது ஏன்?
அர்னாப்: மிஸ்டர் காந்தி, மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள். இப்போது பேச வேண்டாம்.
திருமுருகன் காந்தி: ஏன் நான் பேசாமலிருக்க வேண்டும்... என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.
அர்னாப்: உங்களோடு நான் விவாதிக்க விரும்பவில்லை. அவரிடமிருந்து மைக்கைப் பிடுங்குங்கள். இனி இந்த விவாதத்தில் உங்களோடு தொடர விரும்பவில்லை.
சர்தேசாயையும் விட்டு வைக்கவில்லை
அர்னாப்புக்கு கொஞ்சமும் குறையாத ராஜ்தீப் சர்தேசாயையும் விட்டு வைக்கவில்லை திருமுருகன் காந்தி. அவரிடமும் சந்திராசாமி, சுப்பிரமணிய சாமியை விட்டுவிட்டு, அப்பாவிகளை போட்டு வதைப்பது ஏன் என கேட்டு திணறடித்தார் திருமுருகன் காந்தி.
ஒரு தமிழ்த் தொலைக்காட்சியில் ஜெயின் கமிஷன் விவகாரத்தை சுப.வீரபாண்டியன் கிளப்பியபோது உடன் விவாதத்தில் இருந்த சுப்பிரமணிய சுவாமி பாதியிலேயே கிளம்பிச் சென்றது நினைவுகூறத்தக்கது.