ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியது காட்டுமிராண்டித்தனமானது: திருமுருகன் காந்தி ஆவேசம்!
சீமானை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது என மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: சீமானை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது என மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இன்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் சீமான், தமிமுன் அன்சாரி, இயக்குநர் பாரதி ராஜா, அமீர் உள்ளிட்ட பலர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்தனர்.
கைது செய்ய திட்டம்
ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து சீமான் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்தது காவல்துறை. இந்நிலையில் சீமானை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
கட்சியினர் மட்டும் விடுவிப்பு
இதைத்தொடர்ந்து சீமானை விடுவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சித் தொண்டர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தீர்ப்புக்கு எதிராக
இதைத்தொடர்ந்து மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி சென்னை பல்லாவரத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என அவர் குற்றம்சாட்டினார்.
கைதுக்கு கண்டனம்
மக்கள் கைது செய்யப்படுவது ஜனநாயக விரோதமானது என்றும் அவர் கூறினார். சீமான், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கைதுக்கு திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்தார்.
காட்டுமிராண்டித்தனமானது
சீமானை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது என்றும் திருமுருகன் காந்தி கூறினார். ஜனநாயக முறையில் போராடியவர்களை சிறையில் அடைப்பது சரியல்ல என்றும் திருமுருகன் காந்தி தெரிவித்தார்.
விடுவிக்க வலியுறுத்தல்
காலையில் கைதானவர்களை இன்னும் விடுவிக்காததற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார். சீமான், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் திருமுருகன் காந்தி வலியுறுத்தினார்.