வருகிறது துணை ராணுவப் படை... அடுத்து என்ன நடக்கும் தமிழகத்தில்? திருமுருகன் காந்தி எச்சரிக்கை
இந்திய அரசும், காவல்துறையும் மிகவும் குரூரமானது என்று திருமுருகன் காந்தி தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை : இந்திய அரசும், காவல்துறையும் மிகவும் குரூரமானது என்பதை மீண்டும் ஒருமுறை தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நிரூபித்து இருக்கிறது என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது காவல்துறை நேற்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, காவல்துறை மற்றும் இந்திய அரசின் குரூரத்தை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது என்று ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சட்டவிரோதமான படுகொலை
அந்தப் பதிவில், இந்த அரசும், காவல்துறையும் எத்தனை குரூரமானது என்பதற்கான ஆதாரமின்றி இது வேறென்ன? பலமுறை மே17 இயக்கம் சொல்லியவற்றை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறோம். இந்தியாவில் அதிகாரப் பரவலுக்கு 4 வகையான மாநிலங்கள் உண்டு. ராணுவத்தாலும் AFSPA போன்ற ஒடுக்குமுறை சட்டங்களால் ஆளப்படும் காசுமீர், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து, அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் முதல் வகை, துணை ராணுவப்படையால் ஆக்கிரமிக்கப்பட்டு, சட்டவிரோதமாக மக்களை கொலை செய்யும் அதிகாரம் பெற்ற படையணிகள்கொண்டு ஆளப்படும் சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் இரண்டாம் வகையைச் சார்ந்தது.
ஒடுக்கப்படும் மாநிலங்கள்
கடுமையான ஒடுக்குமுறை, போராடும்- ஒன்று கூடும் உரிமை நிரந்தரமாக மறுக்கப்பட்டு அவ்வப்போது சிறு சிறு குழுக்களாக மக்களை கொல்லும் அதிகாரம் பெற்ற காவல்படைகள்- காவல்துறை கொண்டு ஆளப்படும் மாநிலங்கள் மூன்றாம் வகை. இதில் முதன்மையானது தமிழ்நாடு. இரவு வெளியில் செல்ல, வணிகம் நடத்த தடை, அரசியல் நிகழ்வுகளுக்கு தடை. சிறு சிறு மீறல்களுக்கும் கடுமையான தண்டனை போன்ற கட்டுப்பாடு கொண்டு ஒடுக்கப்படும் மாநிலம்.
வன்முறை எதிர்வினை
பிற மாநிலங்களில் இதை விட குறைந்த அளவிலான அரசவன்முறையாலும், தேவைப்படும் போதும் பயன்படுத்தப்படும் வன்முறை கொண்டு ஒடுக்கப்படும் மாநிலங்கள் நான்காவது வகையைச் சார்ந்தது. இதில் மாநிலங்களில் மக்களின் எதிர்ப்பு அரசியலைப் பொறுத்து அவை மேலுயர்த்தப்படும் . அதாவது காவல்துறை கட்டுப்பாட்டிலிருந்து , துணை ராணுவக் கட்டுப்பாட்டிற்கு அதிகாரம் மாற்றப்படும். மிக மோசமான பயங்கரவாத அடக்குமுறையை அரசு கட்டவிழ்த்து , அமைதி வழியில் போராடும் மக்களை வன்முறை மூலம் எதிர்வினை செய்ய நகர்த்தும்.
ராணுவ மயமாகும் தமிழகம்
பின்னர் மக்கள் வன்முறை செய்கிறார்கள் அல்லது வன்முறை குழுக்கள் உள்ளன என்று சொல்லி அடக்குமுறையை அதிகரிக்கும். அதை காரணம் காட்டி ராணுவம் அல்லது துணை ராணுவம் அல்லது சிறப்பு படைப்பிரிவுகளை களமிறக்கும். இந்த முயற்சிகளை பரமக்குடி, முல்லைப்பெரியார், இடிந்தகரை, ஜல்லிகட்டு, காவிரி டெல்டா , தூத்துக்குடி என படிப்படியாய் நகர்த்தி வருகிறது இந்திய அரசு. எல்லையோர மாநிலமான தமிழ்நாடு மடும் தான் அதிக அளவில் ராணுவம் குவிக்கப்படாத மாநிலம். இதை ராணுவமயமாக்கும் நகர்வில் கடற்கரையோர மக்களை குறிவைத்து தாக்கி அழிக்கிறது அரசு.
தமிழின வாழ்வாதாரம்
இந்த தாக்குதல் மீனவர்- விவசாயி-நகர்புற குடிசைவாசி- தொழிலாளி நோக்கி தீவிரமடைந்திருக்கிறது என்பதை நாம் கவனித்தல் முக்கியம். தூத்துக்குடி அரச பயங்கரவாதம் தமிழீழத்தில் சிங்களப்படை யாழ் பல்கலையில் நிகழ்த்திய வன்முறைக்கு ஒப்பானது எனலாம். அங்கே மொழி உரிமைக்கான முழக்கத்தில் ரத்த ஆற்றை உருவாக்கியது, இங்கே வாழ்வாதார உரிமை போராட்டத்தில் ரத்த ஆறு ஓடுகிறது. தமிழ்நாட்டில் நடக்கும் இனப்படுகொலை 'தமிழின வாழ்வாதாரம்' சார்ந்தே நிகழுமென 2010ல் பதிவு செய்தோம்.
அரசியல் பயில்வது அவசியம்
இந்நகர்வில் தமிழர் கடலின் மீதான ஆதிக்க அரசியல் முக்கியமான கண்ணி என்பதை புரிந்தே ' தமிழர் கடல்' எனும் சொல்லாடலை 2010 மதுரை கூட்டத்தில் பிரகடனப்படுத்தியது மே17 இயக்கம். அரசியல் பயில்வது , பயங்கரவாதிகளின் அரசை புரிந்து கொள்ளும் முதற்படி. இயக்கமாவது அதன் அடுத்தகட்ட அரசியல் தேவை என்பதை உணர்வது அவசியம் என்பதை தூத்துக்குடி பயங்கரம் சொல்லுகிறது என்று தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.