தீவிரவாதிகள் மீது பிரயோகிக்கும் கடுமையான "ஊபா" சட்டம்.. திருமுருகன் காந்தி மீது பாய்ந்தது!
Recommended Video
சென்னை: மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி மீது ஊபா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருபவர் திருமுருகன் காந்தி. ஐநா சபையில் சேலம்-சென்னை 8 வழிச்சாலை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்பாக, பேசிவிட்டு திரும்பியபோது, பெங்களூர் விமான நிலையத்தில், திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்.
இதன்பிறகு ராயப்பேட்டையிலுள்ள ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்தனர். இதன்பிறகு பல்வேறு பழைய வழக்குகளை தூசு தட்டி, திருமுருகன் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருமுருகன் காந்தி மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில், சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017 செப்டம்பர் மாதம், திருமுருகன் காந்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியபோது, பாலஸ்தீனம் போல, போராட்டம் நடைபெறும் என பேசியுள்ளார். இதற்காக, திருமுருகன் காந்தி மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு வழக்கு பாய்ந்துள்ளது.
ஊபா (UAPA) 13 (1) (b) சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Unlawful Activities (Prevention) Act சுறுக்கமாக UPA என்று அழைக்கப்படும் இந்த சட்டத்தின்கீழ், கைது செய்யப்படும் ஒருவரை 6 மாதங்கள் விசாரணை இல்லாமல் சிறை வைக்க முடியும். இதன்கீழ் கைதானவரால் ஜாமீன் பெற முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம், 7 வருடம் தண்டனை தர முடியும். தடா, பொடா சட்டங்கள் போன்ற வலுவான சட்டம் இது.
இயக்குநர் கவுதமன் இதுபற்றி கூறுகையில், தமிழர் உரிமை, தமிழ் நாட்டு வளங்களை கொள்ளையடிப்பதற்கு எதிராக, போராடுவோர் வரிசையாக ஒடுக்கப்படுகிறார்கள். என்மீது கூட 40 வழக்குகள் பதிவு செய்துள்ளார்கள். அரியலூரில் தங்கியிருந்தபடிதான் கையெழுத்து போட்டு வருகிறேன்.
கையில் ஆயுதம் வைத்திருக்கும் தீவிரவாதிக்கு எதிராக போடப்படும் வழக்குதான் UPA. மிக கடுமையான சட்டம் இது. கருத்துரிமை பேசியவருக்கு எதிராக இந்த சட்டத்தை பிரயோகித்துள்ளது ஏன் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார்.