காந்தி ஜெயந்தியன்று... விடுதலையானார் திருமுருகன் காந்தி!
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வேலூர்: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஐநா சபையில் பேசியதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஐநாவில் பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். அது மட்டுமில்லாமல் பல முக்கிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது.
கைது
முதலில் இவரை நீதிமன்ற காவலில் எடுக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது, அதனால் அவர் விடுதலையும் செய்யப்பட்டார். அதன்பின் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
52 நாட்கள்
இந்த நிலையில் அவர் வேலூர் சிறை சென்று இன்றோடு 52 நாட்கள் ஆகிவிட்டது. அவர் உடல்நிலை இதனால் மோசமாக நலிவடைந்து இருப்பதாக கூறப்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜாமீன் பெற்றார்
இந்த நிலையில் அவர் மீதான அனைத்து வழக்குகளுக்கும் ஜாமீன் கிடைத்துவிட்டது. திருமுருகன் காந்தி மீது போடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளுக்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் பிணை பெறப்பட்டது. அந்த ஆணை வேலூர் சிறையில் சிறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது.
விடுதலை செய்யப்பட்டார்
இந்த நிலையில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரது அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் இதனால் சந்தோஷ மிகுதியில் உள்ளனர். அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற வாய்ப்புள்ளது.