ராகுல் பிரதமர்... ஸ்டாலின் முதல்வர் - அச்சாரம் போட்ட திருநாவுக்கரசர்
மத்தியில் மோடி அரசும், மாநிலத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசும் அகற்றப்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை: மத்தியில் பிரதமராக ராகுல்காந்தி அமரவேண்டும், தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் திருநாவுக்கரசர்.
திருச்சியில் நடைபெற்ற நீட் கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பேசியுள்ளார்.
மத்திய அமைச்சர்களையும், பிரதமர் மோடியையும் பார்த்து எடப்பாடி பழனிச்சாமி அஞ்சுகிறார். நீட் தேர்வை எதிர்த்து மாணவர்களும், அரசு ஊழியர்களும் போராடுகிறார்.
மோடி அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து விட்டது. 500 ரூபாய் கொடுத்தாலே ஓட்டு மாற்றி போடுவார்கள். ஆனால் மோடி 15 லட்சம் அக்கவுண்டில் போடுவதாக கூறிய உடன் அனைவரும் ஓட்டு போட்டு விட்டார்கள். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்து கருப்பு பணத்தை மீட்டு யாருடைய அக்கவுண்டிலும் போடவில்லை.
வீட்டில் பெண்கள் சுருக்கு பையில் வைத்திருந்த பணத்தை பறித்து கொண்டார். இனி மோடி மாற மாட்டார். மோடி அரசை மாற்ற வேண்டும். தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மாறமாட்டார். எடப்பாடி பழனிச்சாமி அரசை மாற்ற வேண்டும்.
மத்தியில் பிரதமராக ராகுல் காந்தி அமரவேண்டும். அதே போல மாநிலத்தில் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றும் என்று கூறினார் திருநாவுக்கரசர்.