நீட் தேர்விற்கு விலக்கு பெற முடியாத கையாலாகாத எடப்பாடி அரசு.. திருநாவுக்கரசர் அட்டாக்
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு சரியில்லை. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிட்ட ஒத்தக் கருத்துடைய கட்சிகள் ஆதரவு தெரிவித்து பங்கேற்றன. சென்னை பிராட்வேயில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கைதுக்கு கண்டனம்
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நீட் தேர்விற்கு எதிராக மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்றே அவர் கைது செய்யப்பட்டார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
கையாலாகாத அரசு
காவல் துறையை வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி இப்படிச் செய்து தவறு. அவர் செயல்படும் விதம் அவருக்கும், இந்த அரசுக்கு நல்லப் பெயரைப் பெற்றுத் தராது.
அதிமுகவின் பெயர் மற்றும் சின்னத்தைக் காப்பாற்ற முடியவில்லை. நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. 88ஆயிரம் கோடி பணம் மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை.
மத்திய அரசுக்கு அடிமையாக..
எதையும் பெற முடியாத, கையாலாகாத அரசாக மத்திய அரசிடம் மண்டியிட்டுக் கிடக்கும் அரசாக, அடிமை அரசாக எடப்பாடி அரசு செயலற்றுக் கிடக்கிறது. இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்காதது கண்டனத்திற்குரியது.
தொடரும் போராட்டம்
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்த வேண்டும். மாநில அரசு அதற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.