பிரதமர் மோடியின் துக்ளக் தர்பார்.. திருநாவுக்கரசர் 'பொளேர்'
பிரதமர் நரேந்திர மோடி 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து துக்களக் தர்பார் நடத்துகிறார் என்று காங்கிரஸ் கமிட்டி தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கடுமையாக தாக்கிப் பேசியிருக்கிறார்.
சென்னை: ரூ.500, 1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து சாதாரண மக்களை மிகப்பெரிய சிரமத்துக்குள்ளாக்கிய மோடி துக்ளக் தர்பார் நடத்தி வருவதாக காங்கிரஸ் கமிட்டியின் தமிழக தலைவர் திருநாவுகரசர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை தொடங்குகிறது. ஆண்டு முழுவதும் இந்த விழா கொண்டாடப்படும். தமிழகத்தில் நடைபெறும் இவ்விழாவில் பங்கேற்க ராகுல் காந்தி விரைவில் இங்கு வருகிறார். ராகுல் வரும் தேதி, விழா நடைபெறும் இடம் ஆகிய விவரங்கள் பின்னர் இறுதி செய்யப்படும்.
இந்தியா வல்லரசாக மாற அடித்தளம் இட்டவர் இந்திரா. விவசாய வளர்ச்சியை உருவாக்கிய அவர், நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்தார். ஆனால், தற்போது ஆளுகின்றவர்கள் மக்களை வீதிவீதியாக அலைய வைக்கிறார்கள்.
ரூ.500, 1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து சாதாரண மக்களை மிகப்பெரிய சிரமத்துக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். இந்த நடவடிக்கையின் மூலம் மோடி துக்ளக்தர்பார் நடத்தி வருவது தெரிகிறது.
மத்திய முன்னாள் அமைச்சர் பா. சிதம்பரம் குறிப்பிட்டது போல் மாதம் ரூ.21 ஆயிரம் கோடி மட்டுமே அச்சிட முடியும். அப்படி என்றால் இன்னும் ஏழு, எட்டு மாதங்கள் கழித்துதான் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் பண பரிவர்த்தனை செய்யும் கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசாவ் வங்கி அனுமதி அளிக்காதது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதனால், அவர்கள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
தமிழக மீனவர்கள் தொடர்பாக முத்தரப்பு பேச்சு நடத்தினார்கள். குழுக்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் இது வரை எதுவும் நடை பெறவில்லை. மாறாக இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் உடனடியாக அவர்களை மீட்டோம். படகுகளையும் மீட்டு வந்தோம். ஆனால், தமிழக மீனவர்கள் நலனை தற்போதைய மத்திய அரசு புறக்கணித்து விட்டது என்றார் திருநாவுக்கரசர்.