ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை பற்றி கவலைக் கொள்ள வேண்டாம்- திருநாவுக்கரசர்
Recommended Video
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருநாவுக்கரசர் பாஜகவில் இருந்து விலகி தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார்.
அவர் காங்கிரஸ் கட்சியில் இருப்பதை விட மீண்டும் வாஜ்பாய் இருந்த பாஜகவுக்கு சென்றால் அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. இப்போதும் ஒன்றும் கெட்டு போய்விடவில்லை, அவர் மீண்டும் பாஜகவில் இணைந்தால் அவருக்கும் தமிழக காங்கிரஸுக்கும் நல்ல எதிர்காலம் உண்டு என்றார்.
இந்த கருத்து கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருநாவுக்கரசர் கூறுகையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம்.
முதலில் அவரது எதிர்காலத்தை பற்றி அவர் கவலை கொள்ளட்டும் என்று பதில் அளித்துள்ளார். ஏற்கெனவே தமிழக காங்கிரஸ் கட்சி கோஷ்டி அரசியலுக்கு பெயர் போன கட்சி என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில் இதுபோல் மூத்த தலைவர்கள் மோதி கொள்வது பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.