கூடங்குளம் மீன் அரவை ஆலையால் சுகாதார சீர்கேடா?... ஆய்வுக்கு ஆட்சியர் உத்தரவு!
கூடங்குளம் மீன் அரவை ஆலையினால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறதா என்பதை ஆராய மாவட்டஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கூடங்குளம் : கூடங்குளம் அருகே இயங்கி வரும் மீன் அரவை ஆலையினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது உறுதி செய்யப்பட்டால் மூடப்படும் என்று திருநெல்வேலி ஆட்சியர் சந்தீப் நந்தூரி உறுதியளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே இருக்கன்துறை பகுதிகளில் 4 மீன் அரைக்கும் அரவை அலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகில் உள்ள குளங்களில் விடுவதினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமல்லால் ஆழ்துளை கிணறும் பாதிக்கப்படுவதாக இருகன்துறை, சங்கனேரி , புல்லமங்கலம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை அளித்தனர்.
அதனை பெற்று கொண்ட நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மீன் அரவை ஆலைகளில் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்பு ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளங்களில் விடப்படும் பகுதியையும் ஆய்வு செய்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது : ஏற்கனவே சீல் வைக்கப்பட்டு பின்பு நீதிமன்றம் உத்தரவின் பெயரில் தற்காலிகமாக சீல் அகற்றப்பட்டது. தற்போது மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு மீன் அரவை ஆலைகளில் இருந்து வரும் மாசு அளவை கணக்கீடு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளோம். அதில் அதிக அளவில் மாசு இருந்தால் மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.