'போர்ட்' வசதிக்காக அலைமோதும் மக்கள்.. ஏர்செல் அதிகாரிகள் திணறல்
ஏர்செல் சேவை முடங்கியுள்ளதால் வேறு செல்போன் நிறுவனத்திற்கு மாற மக்கள் கூட்டம் அலைமோதுவதால் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
திருநெல்வேலி : ஏர்செல் சேவை முடக்கத்தால் வேறு நிறுவனத்திற்கு மாற பொது மக்கள் அலை மோதி வருவதால் இதர சேவை நிறுவனங்கள் இடையே போட்டா போட்டி நிலவுகிறது.
தமிழகத்தில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட ஏர்செல் நி்றுவனத்தில் கடந்த சில நாட்களாக சிக்னல் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. செல்போன் டவர்களுக்கு பாக்கி தொகை வழங்காததால் சேவை வழங்க முடியவில்லை என ஏர்செல் நிறுவனம் தெரிவித்தது.
தகவல் ஒழுங்கு முறை ஆணையமும் ஏர்செல் நிறுவனம் திவாலாகி விட்டதாக தெரிவித்தது. இதையடுத்து வரும் 15ம் தேதி முதல் தனது சேவையை முற்றிலும் நிறுத்த போவதாக ஏர்செல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்ற பல்வேறு இடத்திற்கும் அலைந்து வருகின்றனர். போர்ட் வசதி மாற்றம் கோரி ஒரேநேரத்தில் மக்கள் நிறுவனங்களுக்கு படையெடுப்பதால் அவர்களை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.