மிளகாய் சாகுபடி பாதிப்பு... தண்ணீர் இல்லாமல் திண்டாடும் நெல்லை விவசாயிகள்!
திருநெல்வேலி அருகே மிளகாய் சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.
திருநெல்வேலி : நெல்லை அருகே மிளகாய் சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் அல்லாடி வருகின்றனர். விளைச்சலில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க விவசாயிகள் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கி மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் போதிய தண்ணீர் இல்லாத நிலையில் விளைச்சல் அறுவடை சமயத்தில் கைகொடுக்குமா என்ற கவலையில் உள்ளனர் மிளகாய் விவசாயிகள்.
நெல்லை அருகே வேலாயுதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்தாண்டு பருவமழை கைவிட்டதால் விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பலத்த நஷ்டத்துக்கு ஆளாகினர். இந்த ஆண்டாவது பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் கம்பு, சோளம், உளுந்து போன்ற பயிர்களை நடவு செய்தனர்.
ஆனால் இந்தாண்டும் பருவமழை போக்கு காட்டி வருகிறது. நிலத்தில் விதைத்த விதைகள் முளைக்காமல் பாதியிலேயே நிற்கின்றன. இதனால் மனமுடைந்த விவசாயிகள் தளராமல் தங்கள் நிலத்தை டிராக்டர் மூலம் உழுது சமன் செய்து தண்ணீரை விலைக்கு வாங்கி மிளகாய் நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்தாண்டு பருவமழை பொய்ந்து விவசாயம் இல்லாமல் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டது. பருவமழை இந்தாண்டு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் வழக்கம் போல் விவசாய பணிகளை மேற்கொண்டோம். ஆனால் எங்கள் பகுதி கிராமத்தில் பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.
இதனால் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். ரூ. 10 ஆயிரம் வரை செலவு செய்து மிளகாயை விதைத்துள்ளோம். இது விளைந்து அறுவடை நடந்தால் தான் லாபம் கிடைக்குமா இல்லையா என்பதை சொல்ல முடியும், போட்ட பணமாவது கையில் கிடைக்குமோ தெரியவில்லை என்று வேதனையுடன் கூறகின்றனர் அவர்கள்.