விஸ்வரூபம் எடுத்த பஸ் கட்டண உயர்வு போராட்டம் - நெல்லை, தூத்துக்குடியிலும் எதிர்ப்பு!
பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி நெல்லையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது.
Recommended Video
திருநெல்வேலி: பஸ் கட்டண உயர்வை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூரிலும் மறியலில் ஈடுபட்ட சுமார் 500 பேர் கைதாகி மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் சார்பிலும், மாணவர்கள் சார்பிலும் போராட்டம் நடந்து வருகிறது. நெல்லையில் நடந்த போராட்டத்தில் வண்ணார்பேட்டையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்த எதிர்கட்சியினர் சுற்றுலா மாளிகை, திருவனந்தபுரம் ரோடு வழியாக வந்து நெல்லை கலெக்டர் அலுவலக வாளகத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 6 எம்எல்ஏக்கள் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக பாளையங்கோட்டை - நெல்லை இடையே நேற்று கடுமையான வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதே போன்று தூத்துக்குடி மாவட்டத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் 11 இடங்களில் மறியல் நடந்தது.
தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே நடந்த பஸ் மறியலுக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதா ஜூவன் தலைமை வகித்தார். திருச்செந்தூரில் நடந்த போராட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அங்கு நடந்த போராட்டத்தில் 500 பேர் பங்கேற்று கைதாகி விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் கீழஈரல், பேட்டையில் கல்லூரி மாணவ, மாணவிகள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். இவர்கள் கடந்த இரண்டு நாட்களாக கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால் வாளகத்தை விட்டு வெளியே வந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் குதித்தனர். நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தொடர்கிறது.