பேஸ்புக்கில் பச்சைக்கிளிகள் பற்றி நூதன விளம்பரம்... இளைஞரை மடக்கிப் பிடித்த வனத்துறை!
முகநூலில் நூதன முறையில் விளம்பரம் செய்து கிளிகளை விற்பனை செய்ய முயன்ற இளைஞரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி : பேஸ்புக்கில் நூதன விளம்பரம் செய்து கிளிகளை விற்பனை செய்ய முயன்ற வாலிபரை வனத்துறை பாதுகாப்பு துறையினர் மடக்கி பிடித்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பாளையங்கோட்டை அருகே கீழநந்தம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் ஆரல்வாய்மொழி காற்றாலை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது காற்றாலைகளில் வேலை இல்லாததால் ஊரில் கிடைக்கும் வேலைகளை செய்து வருகிறார். அழகான பச்சை கிளிகள் விற்பனைக்கு உள்ளது. எனது செல்போனில் பேசவும் என்று இவர் முகநூலில் விளம்பரம் செய்திருந்தார்.
இந்த விளம்பரத்தை சென்னையை சேர்ந்த வனவிலக்கு பாதுகாப்பு குழுவினர் பார்த்து நெல்லையை சேர்ந்த வனக்குழுவுக்கு தகவல் தெரிவித்தனர். செல்போனில் ராஜகோபாலை தொடர்பு கொண்ட அவர்கள் கிளியை வியாபாரம் பேசுவது போல அவரை தொடர்பு கொண்டனர். அவர் வண்ணார்பேட்டை சாலை தெருவில் ஓட்டல் முன்பு இருப்பதாக தகவல் கொடுத்தார்.
அங்கு சென்ற வனத்துறையினர் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 23 பச்சை கிளி குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜகோபால் வனத்துறையில் அளித்த வாக்குமூலத்தில் வேலையின்மை காரணமாக பனவடலிசத்திரம் அருகே தென்னை மரத்தில் ஏறி கிளி குஞ்சுகளை பிடித்து விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தார். இதுகுறித்து வனத்துறையினர் வழக்கு பதிந்து அவரை சிறையில் அடைத்தனர்.