திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸ் மாரடைப்பால் மரணம்
Recommended Video
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 69.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் சீனிவேல் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். ஆனால் சீனிவேல் மரணமடைந்த காரணத்தால், அங்கு இடைத் தேர்தல் வந்தது. அதில் ஏ.கே.போஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நேற்று இரவு போஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் போஸ் மரணமடைந்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ ஏ.கே. போஸ். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்து வந்தவர். 2006, 2011 சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டுமுறை எம்.எல்.ஏவாக பதவி வகித்துள்ளார். மதுரை ஜீவா நகரில் வசித்து வந்த ஏ.கே. போஸ் அடிப்படையில் டிராவல்ஸ் அதிபர்.
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்தாலும் பரபரப்பான அரசியல்வாதியில்லை என்பதால் பலருக்கும் இவரைப் பற்றி தெரியாது. 69 வயதான ஏ.கே. போஸ் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 1993ம் ஆண்டு எம்.ஏ அரசியல் அறிவியல் பட்டப் படிப்பை முடித்துள்ளார். இவரது தந்தை பெயர் கருப்பத்தேவர். இவரது மனைவி பெயர் பாக்யலட்சுமி.
டிராவல்ஸ் அதிபரான போஸ் கடந்த 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2006ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார். 2007ம் ஆண்டு சட்டசபையில் நடைபெற்ற அமளி துமளியில் தொப்பியை சபாநாயகர் மேஜை மீது வீசியதாக பத்து நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கட்சித் தலைவி ஜெயலலிதாவின் கவனம் ஈர்த்தார்.
2011ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு ஒதுக்கப்படவே, போஸ், மதுரை வடக்குத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டாவது முறை எம்.எல்.ஏவானர். 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் வடக்குத் தொகுதியில் போட்டியிட மனு அளித்தார் கூடவே திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் துண்டு போட்டார் ஆனால் அவருக்கு ஜெயலலிதா வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அதில் வெற்றியும் பெற்றார்.
சசிகலா டூ எடப்பாடி பழனிச்சாமி
ஏ.கே.போஸ் முன்பு தினகரனுக்கு ஆதரவாக திரும்பியவர். தேனியில் நடந்த திருமண விழாவின்போது தினகரனை சந்தித்தார். பின்னர் தினகரனுக்கு ஆதரவாகப் பேசினார். ஆனால் நிகழ்ச்சியை முடித்து விட்டு மதுரை திரும்பிய அவரை ஹோட்டலில் வைத்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் சந்தித்துப் பேசினா். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தான் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அணியில்தான் இருப்பதாக கூறி அதிர வைத்தார் போஸ்.