2 வருடங்களில் 2வது இடைத் தேர்தலை சந்திக்கும் திருப்பரங்குன்றம் தொகுதி!
Recommended Video
மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதிக்கு 2வது முறையாக இடைத் தேர்தல் நடத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலையும் கணக்கில் கொண்டால், அத்தொகுதி மக்கள் 2 வருடங்களில் 3வது முறையாக ஓட்டு போட அவசியம் எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதியை கடந்த 2011 தேர்தலில், கூட்டணியில் இருந்த, தேமுதிகவுக்கு ஒதுக்கியிருந்தது அதிமுக. இதனால் அங்கு போட்டியிட்டு ஏ.கே.டி. ராஜா வெற்றி பெற்றார். இந்த நிலையில் 2016ல் அதிமுகவே நேரடியாக போட்டியிட்டது.
சீனிவேல் போட்டி
முன்னாள் எம்.எல்.ஏவான 65 வயது சீனிவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடைசியாக கடந்த 2001ல் இங்கு அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். மீண்டும் சீட் கிடைத்ததால் பெரும் ஆர்வத்துடன் சீனிவேல் தரப்பு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது. வயதையும் பொருட்படுத்தாமல் சீனிவேல் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது.
சீனிவேல் மரணம்
சிகிச்சை பெற்றபடியே, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 2016ம் ஆண்டு, மே 25ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் சீனிவேல்.
ஏ.கே.போஸ் வெற்றி
இந்த நிலையில்தான், இடைத் தேர்தலில், அதிமுக சார்பில் ஏ.கே.போஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் கட்சி பணிகளில் ஈடுபடாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார் ஏ.கே.போஸ். இன்று அதிகாலை 1 மணியளவில் மாரடைப்பால் ஏ.கே.போஸ் மரணமடைந்துள்ளார்.
2வது இடைத் தேர்தல்
இதன் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதிக்கு 2வது முறையாக இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. பொதுத் தேர்தலையும் சேர்த்து, திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் கடந்த 2 வருடங்களில் 3வது முறையாக வாக்களிக்க உள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியின் இப்படியான நிலை வேறு எந்த தொகுதிக்கும் வரக்கூடாது என்பதே பொதுமக்கள் பிரார்த்தனை.