திருப்பரங்குன்றத்தில் தபால் வாக்குகளில் முறைகேடு: திமுக புகாரை வாங்க மறுத்த தேர்தல் அதிகாரி
மதுரை: திருப்பரங்குன்றத்தில் தபால் வாக்குகளில் அதிமுக முறைகேடு செய்துள்ளதாக திமுக வேட்பாளர் அளித்த புகாரை வாங்க தேர்தல் அதிகாரி மறுத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் கடந்த 19ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.கே. போஸ் மற்றும் திமுக சார்பில் டாக்டர் சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் வைத்து இன்று எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு துவங்கியது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான 48 தபால் வாக்குகளில் அதிமுகவுக்கு 44 கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக வேட்பாளர் சரவணன் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார்.
அவர் தனது புகாரில் கூறியிருப்பதாவது,
தேர்தல் அதிகாரி வீரராகவராவ் தபால் வாக்குகளில் 2 வாக்குகள் பதிவாகியுள்ளது என்றார். இன்று காலை முதலில் 34 வாக்குகள் பதிவானதாக கூறினார். சிறிது நேரத்தில் பெட்டி ஒன்றை கொண்டு வந்து 48 வாக்குகள் பதிவாகியுள்ளது என்றார்.
தபால் வாக்குகளில் பெரும்பாலானவற்றில் ஒரு குறிப்பிட்ட மையால் ஒரே மாதிரி டிக் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏதோ முறைகேடு நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் அதிகாரி சரவணனின் புகாரை வாங்க மறுத்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.