திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் : ரூ. 2.18 கோடி பணம், நகை பறிமுதல் - மாவட்ட ஆட்சியர்
இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் நவம்பர் 7ம் தேதி வரை ரூ. 2.18 கோடி ரூபாய் பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் கூறியுள்ளார்.
மதுரை: அக்டோபர் 18 முதல் நவம்பர் 7ம் தேதி வரை ரூ.2.18 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று மதுரை ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் தேர்தலையொட்டி பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து மதுரை மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடந்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் மீறியதாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இத்தொகுதியில், அதிமுக சார்பில் ஏகே போஸ், திமுக சார்பில் டாக்டர் சரவணன், தேமுதிக சார்பில் டி. தனபாண்டியன் போட்டியிடுகின்றனர். திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பான புகார் அளிக்க மதுரை காவல்துறை தொலைபேசி எண்கள் அறிவித்துள்ளது. 0452-2344989, 2520760, 2520707, 9498101360 என்ற எண்ணில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தங்களது புகார்களை தெரிவிக்கலாம். 8300021100 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் மக்கள் புகார்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று திமுக படு தீவிரமாக களமிறங்கியுள்ளது. ஆளும்கட்சியான அதிமுக வெற்றியை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்காது என்பதால் தேர்தல் நெருங்க நெருங்க வாக்காளர்களை கவர பணம் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் விநியோகத்துக்கு பஞ்சம் இருக்காது எனக்கூறப்படுகிறது. ஆனால் இதைத் தடுக்க பறக்கும்படையினர் திமுக, அதிமுக கட்சிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
அரசியல் கட்சியினர் எந்தெந்த வழிமுறைகளை தேர்ந்தெடுந்தாலும் அந்த வழி களை கண்டுபிடித்து தடுக்க பறக்கும் படையினர், கிராமம், கிராமமாக அவர்களை பின் தொடர்ந்து வருகின்றனர். பரிசுப்பொருட்களுக்காக மொத்தமாக பேன்சி ஸ்டோர், பர்னிச்சர் கடைகள், ஜவுளிக் கடை களில் கொள்முதல் செய்வோர் கண்காணிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக திருப்பரங்குன்றம் தொகுதி மட்டுமில்லாது இந்த தொகுதிக்கு பக்கத்து தொகுதிகள், மதுரை நகரப்பகுதி திமுக, அதிமுக நிர்வாகிகளுக்கு சொந்த நிறுவனங்கள், கடைகள் மற்றும் அவர்கள் வீடுகளும் கண்காணிக்கப்படுகிறது. அக்டோபர் 18 முதல் நவம்பர் 7ம் தேதி வரை ரூ.2.18 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று மதுரை ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.