உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கு.. டிசம்பர் 12-ல் திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு
உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் டிசம்பர் 12ம் தேதி திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
Recommended Video
திருப்பூர் : சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் பட்டபகலில் ரோட்டில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலையில் திருப்பூர் நீதிமன்றம் அடுத்த மாதம் 12ம் தேதி தீர்ப்பளிக்கிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை குமரலிங்கத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் சங்கர் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகள் கவுசல்யா என்பவருக்கும் கல்லூரியில் படிக்கும்போது காதல் ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து சங்கர், கவுசல்யா இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டு சங்கரின் வீட்டில் வசித்து வந்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி இவர்கள் 2 பேரும் உடுமலை பஸ்நிலையத்தில் சென்று கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் சங்கர்-கவுசல்யாவை சரமாரியாக வெட்டினர்.
கணவர் வீட்டிலேயே இருக்கும் கவுசல்யா
இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் ரோட்டிலேயே பரிதாபமாக துடிதுடிக்க இறந்துபோனார். காயத்துடன் உயிர் தப்பிய கவுசல்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது சங்கரின் வீட்டிலேயே தங்கி அவர்களது குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருக்கிறார். சங்கரின் இந்த படுகொலை அங்கிருந்த போக்குவரத்து சிசிடிவி காமிராவில் பதிவாகி இருந்தது.
கவுசல்யா உறவினர்கள்
இதன் அடிப்படையில் கவுசல்யாவின் பெற்றோர், தாய்மாமன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி, கூட்டுசதி, 5 பேருக்கு மேல் ஒன்று கூடுதல், வன்கொடுமை, பொதுஇடத்தில் கொடூரமான ஆயுதத்தால் தாக்குதல், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓராண்டாக விசாரணை
கவுசல்யாவின் குடும்பத்தார் உள்பட 11 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். உடுமலை சங்கர் கொலை வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி அலமேலு நடராஜ் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக 1500-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
டிசம்பர் 12ல் தண்டனை விவரம்
இந்த வழக்கு தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த ஓராண்டாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 12ல் அறிவிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. அன்றைய தினம் 11 பேரின் தண்டனை விவரங்களும் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தை மிகவும் பரபரப்பில் ஆழ்த்திய இந்த ஆணவக் கொலையின் தீர்ப்பு சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக அவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்பது தீர்ப்பு வெளியான பின்னரே தெரிய வரும்.