சாதிமறுப்பு திருமணம்.. துடிக்க துடிக்க கொல்லப்பட்ட சங்கர்.. 6 பேருக்கு இரட்டை தூக்கு வழங்கிய 2017!
சாதி மறுப்பு திருமணம் செய்ததற்காக 2016ஆம் ஆண்டு துடிக்க துடிக்க வெட்டி படுகொலை செய்யப்பட்ட சங்கருக்கு 2017ஆம் ஆண்டு நீதி கிடைத்தது.
Recommended Video
திருப்பூர்: சாதி மறுப்பு திருமணம் செய்ததற்காக 2016ஆம் ஆண்டு துடிக்க துடிக்க வெட்டி படுகொலை செய்யப்பட்டார் சங்கர். கணவரின் மரணத்துக்கு நீதி கிடைத்தே ஆக வேண்டும் என கடந்த ஒன்றரை ஆண்டாக போராடிய சங்கரின் மனைவி கவுசல்யாவின் வயிற்றில் பாலை வார்த்தது நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆம் கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்தது திருப்பூர் மகளிர் நீதிமன்றம்...
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் சங்கர். என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகள் கவுசல்யா என்பவரும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்து வந்தனர்.
இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து சங்கர் - கவுசல்யா ஆகியோர் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி இவர்கள் 2 பேரும் உடுமலை பஸ்நிலையத்திற்கு சென்றனர்.
துடிக்க துடிக்க கொல்லப்பட்ட சங்கர்
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சங்கர் - கவுசல்யாவை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் துடிக்க துடிக்க சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிர் தப்பினார் கவுசல்யா. இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
11 பேரை கைது செய்த போலீஸ்
சங்கர் கொலை குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, மற்றும் செல்வகுமார், மதன், ஜெகதீசன், மணிகண்டன், கலை தமிழ்வாணன், மற்றொரு மணிகண்டன், தன்ராஜ், பிரசாந்த் ஆகிய 11 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி, கூட்டுசதி, 5 பேருக்கு மேல் ஒன்று கூடுதல், பொது இடத்தில் கொடூரமான ஆயுதத்தால் தாக்குதல், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜாமீனுக்கு வழியே இல்லை
கைதானவர்களில் கவுசல்யாவின் மாமா பாண்டித்துரை திருச்சி சிறையிலும், மற்ற 10 பேரும் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவர்கள் 11 பேர் மீதும் குண்டர் சட்டமும் பாய்ந்தது. மேலும் இவர்கள் 11 பேருக்கும் வழக்கு விசாரணை முடியும் வரை ஜாமீன் கிடைக்காமல் பார்த்துக்கொண்டது காவல்துறை.
நீதிபதி அலமேலு நடராஜன்
இந்த கொலை வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக 1500-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தீர்ப்பை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு
கடந்த ஓராண்டாக இந்த வழக்கு விசாரணை நடந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்து சிறையில் இருந்து கவுசல்யாவின் பெற்றோர் உட்பட 11 பேரும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தீர்ப்பை முன்னிட்டு நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
11 பேரும் குற்றவாளிகள்
தீர்ப்பை வாசிக்க தொடங்கி நீதிபதி அலமேலு நடராஜன், சங்கர் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமா உள்ளிட்ட 11 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். அப்போது குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த கவுசல்யா தாய் அன்னலட்சுமி, 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தாய் மாமா பாண்டித்துரை, 10வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரசன்னா ஆகிய மூவரை வழக்கிலிருந்து நீதிபதி விடுதலை செய்தார். இதனையடுத்து, குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறு குற்றவாளிகள் தரப்பு நீதிபதியிடம் முறையிட்டது.
6 பேருக்கு இரட்டை தூக்கு
முதல் குற்றவாளியான சின்னசாமிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்தார் நீதிபதி அலமேலு நடராஜன். இதேபோல் சங்கரை துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற கூலிப்படையை சேர்ந்த ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல்ராஜ் ஆகிய 5 பேருக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்தார் நீதிபதி.
காவல்துறைக்கு பாராட்டு
9வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்ததாக கைது செய்யப்பட்ட, 11வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதுபோக குற்றவாளிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்த வழக்கில் நீதி கிடைக்க காவல்துறை கடும் முயற்சி செய்ததாக அரசு வழக்கறிஞர் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
மருந்தாக இருந்த தீர்ப்பு..
தனது கணவர் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நீதி கிடைத்துவிட்டதாக மகிழ்ச்சி தெரிவித்தார் கவுசல்யா. ஆனாலும் விடுவிக்கப்பட்ட தாய் உள்ளிட்ட 3 பேருக்கும் உரிய தண்டனை வாங்கித்தருவேன் சூளுரைத்தார் கவுசல்யா. காதல் கணவரை இழந்து கண்ணீருடன் தவித்த கவுசல்யாவுக்கு ஆறுதலை கொடுத்தது 2017ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் என்பதை மறுப்பதற்கில்லை..