"என் தொகுதியில... என் பேர் இல்லையா?" உங்க அப்பன் வீட்டு காசா?.. எகிறிய எம்எல்ஏ
அரசு அதிகாரிகளிடம் திருப்பூர் எம்எல்ஏ தகராறில் ஈடுபட்டுள்ளார்.
திருப்பூர்: எம்எல்ஏ-வாக பதவியே வகித்தாலும், தன் தொகுதியில் எவ்வளவுதான் செல்வாக்காக இருந்தாலும் பேருக்கும் புகழுக்கும் மயங்காதவர்கள் குறைவுதான் போலிருக்கு.
திருப்பூரில் பிளாஸ்டிக் இல்லா தமிழகம் என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி நடத்திய இந்த விழாவில், மாவட்ட கலெக்டர், திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பெயர் இல்லை
அப்போது எம்எல்ஏ குணசேகரன் விழா மேடை அருகே நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை பார்த்தார். ஒரு கணம் அதிர்ச்சியடைந்துவிட்டார். அங்கிருந்த மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை கோபத்துடன் அழைத்தார். பிறகுதான் தெரிந்தது, அந்த பேனரில் அவர் பெயரையே காணோமாம். அவர் பெயர் மட்டுமல்ல... துணை முதலமைச்சர் ஓ,.பி.எஸ் பெயரும் இல்லை.
அமைச்சர் சமரசம்
இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ, அந்த அதிகாரிகளிடம் காரசாரமாக சண்டை போட்டார். "ஏன் பெயர்கள் இல்லை.. உங்க அப்பன்வீட்டு காசா இது? என் தொகுதியில நடக்கிற ஒரு நிகழ்ச்சிக்கு என்னுடைய பேர் எப்படி போடாம இருக்கலாம்?" என்று அவரை விடாப்பிடியாக பிடித்து கொண்டார்.
இதனை பார்த்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், உடனடியாக இதில் தலையிட்டு எம்எல்ஏவை சமரசம் செய்து வைத்தார்.
அரசு விழாவில் இப்படியா?
இந்த சம்பவம் அந்த நிகழ்ச்சியில் பரபரப்பாக மட்டும் இல்லை, அங்கிருந்த எல்லோரையுமே முகம் சுளிக்க வைத்துவிட்டது. ஒரு அரசு விழாவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூட ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு தெரியாதா? இப்படி பொதுமக்கள் முன்னிலையில் தன் பெயர் விட்டுப்போனது என்பதற்காக சண்டை போட்டால் அவரை தொகுதி மக்கள் என்ன நினைப்பார்கள்?
|
ஐகோர்ட் உத்தரவு
சரி.. இது கூட பரவாயில்லை. அரசு விழாக்களில் வைக்கப்படும் பேனர்களில் முதல்வா், பிரதமா், குடியரசுத் தலைவா் உள்பட குறிப்பிட்ட நபா்களை தவிா்த்து பிறரது வேறு யாருடைய பெயரோ, புகைப்படமோ இடம்பெறக் கூடாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது கூடவா எம்எல்ஏ-வுக்கு தெரியாமல் போய்விட்டது?