நில அபகரிப்பு வழக்கு: சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனத்துக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!
திருவையாறு: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் சகோதரர் டிவி சுந்தரவதனத்துக்கு நில அபகரிப்பு வழக்கில் திருவையாறு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூருவில் இருக்கும் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் ஜனவரி மாதத்தில் தண்டனைக் காலம் முடிந்து சிறையில் இருந்து வெளியே வரலாம் என்று கூறப்படுகிறது. வெளியே வந்த பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இவரது சகோதார் டி.வி. சுந்தரவதனம். இவர் மீது ஏற்கனவே நில அபகரிப்பு வழக்கு நடந்து வருகிறது. தஞ்சாவூரைச் சேர்ந்தவர் மனோகரன். இவருக்குச் சொந்தமான 4.8 ஏக்கர் நிலத்தை கடந்த 2008 ஆம் ஆண்டு சுந்தரவதனம், தன் பெயரில் வலுக்கட்டாயமாக, மாற்றி எழுதிக் கொண்டதாக மனோகரன் புகார் அளித்து இருந்தார்.
இது தொடர்பான வழக்கு திருவையாறு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சுந்தரவதனம் உள்பட 11 பேர் கடந்த 7ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இவர்கள் ஆஜராகவில்லை.
இதையடுத்து சுந்தரவதனம் உள்பட 11 பேருக்கும் திருவையாறு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன் பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதுதொடர்பான வழக்கு வரும் அக்டோபர் பத்தாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.