திருவள்ளூர் சுவர் இடிந்து 11 பேர் பலி - உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை: கலெக்டர் உறுதி
சென்னை: சென்னை அருகே குடோன் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 11 கட்டிடத் தொழிலாளர்கள் பலியான விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் உறுதியளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் அலமாதி அருகே உள்ள உப்பரப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் குடோனின் சுற்றுச்சுவருக்கு அருகேயே குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இப்பகுதியில் கனமழை பெய்தது. இதில் புதிதாக கட்டப்பட்ட அக்குடோனின் சுற்றுச்சுவர் இன்று காலை இடிந்து குடிசையின் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஒரு பெண் உட்பட 11 தொழிலாளர்கள் பலியானார்கள்.
தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது. மேலும், குழந்தைகள் உட்பட பலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:-
விபத்து...
காம்பவுண்டு சுவர் இடிந்து விபத்து நடைபெற்ற இடம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் காலையில் விடிந்த பின்னர்தான் பொதுமக்கள் பார்த்து உள்ளனர்.
மீட்புப் பணி...
காலை 6 மணி அளவில் தகவல் கிடைத்ததும் போலீசாரும், மீட்பு படையினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.
11 பேர் பலி...
ஆனால் துரதிஷ்டவசமாக அதில் ஒருவரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. 11 பேர் பலியாகி உள்ளனர்.
ஆந்திர தொழிலாளர்கள்...
இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள். உயிர் இழந்தவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவர்கள் பெயர் விவரம் போன்றவை முழுமையாக தெரியவில்லை.
அடையாளம்...
அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இது தெரிந்த பின்னர் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
நிவாரண நிதி...
இந்த விபத்து தொடர்பாக குடோன் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசின் நிவாரண உதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
உரிய நடவடிக்கை...
இந்த பகுதியில் அனுமதி மீறி பல குடோன்கள் கட்டப்பட்டு இருப்பதாக கூறப்படும் புகார்கள் மீது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.