மாணவர்களின் பாசப்போராட்டம் வெற்றி.. ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதலை ரத்து செய்தது கல்வித்துறை!
மாணவர்களின் பாசப்போராட்டத்தால் ஒரே நாளில் பிரபலமான ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: மாணவர்களின் பாசப்போராட்டத்தால் ஒரே நாளில் பிரபலமான ஆசிரியர் பகவானின் பணியிட மாறுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார் பகவான். இவர் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் உயர் நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
பகவான் பணி மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ, மாணவிகள் 280 பேர், 19ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கதறிய மாணவர்கள்
கடந்த 20ம் தேதி பள்ளி விடுப்புச் சான்று பெற பள்ளிக்கு வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் சுற்றிக்கொண்டு கதறி அழுதனர்.
|
வைரலான வீடியோ
இதனால் நெகிழ்ந்து போன ஆசிரியரும் பாசம் காட்டும் மாணவர்களை விட்டுச் செல்ல மனமின்றி கண்ணீர் விட்டு அழுதார். மாணவர்களின் இந்த பாசப்போராட்ட வீடியோ வைரலானது.
பிரபலங்கள் வாழ்த்து
பல்வேறு ஊடகங்களிலும் ஆசிரியரை பாராட்டியும் மாணவர்கள், ஆசிரியர் உறவு குறித்தும் செய்திகள் வெளியிடப்பட்டன.இதைத்தொடர்ந்து ஆசிரியர் பகவானுக்கு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வாழ்த்து கூறியிருந்தனர்.
தற்காலிக நிறுத்தம்
மாணவர்களின் பாசப்போராட்ட வீடியோவால், அரசுப்பள்ளி ஆசிரியரும் மாணவர்களும் ஒரே நாளில் பிரபலமாயினர். இதனால் ஆசிரியர் பகவான் பணிநிரவல் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
பணியிட மாறுதல் ரத்து
இந்நிலையில் கல்வித் துறை அதிகாரிகள் பகவான் வெளியகரம் பள்ளி பணியில் தொடர அனுமதி வழங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து அடுத்து பள்ளி ஆசிரியர் வருகை பதிவேட்டில் மீண்டும் பெயர் சேர்க்கப்பட்டு தொடர்ந்து அவர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மகிழ்ச்சி
இதனால் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் பாசப்போராட்டத்தால் ஆசிரியரின் பணியிட மாறுதல் ரத்து செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.