சொகுசு கார் பதிவு செய்ததில் 'தில்லாலங்கடி'.. வசமாக சிக்கிக் கொண்ட அமலாபால்!
சொகுசு கார் பதிவு செய்த விவாரத்தில் நடிகை அமலாபால், நடிகர் பகத்பாசில் மீது திருவனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
திருவனந்தபுரம்: கேரள முகவரியில் இறக்குமதி செய்தால் கூடுதலாக வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக, புதுச்சேரியில் போலியான முகவரியில் சொகுசு காரை பதிவு செய்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகை அமலாபால், நடிகர் பகத்பாசில் ஆகியோர் மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடிகை அமலாபால் புதுச்சேரி உழவர்கரை (oulgaret) ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் காரை தனது பெயரில் பதிவு செய்தார். PY 05 D 500 என்ற பதிவு எண் கொண்ட ரூ.1.15 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு புதுச்சேரியில் 1.5 லட்சம் ரூபாய் வரிசெலுத்தியுள்ளார் அமலாபால்.
ஆனால், இதே காரை கேரளாவில் முறையாக இறக்குமதி செய்து பதிவு செய்தால், 23 லட்சம் வரி செலுத்தியிருக்கவேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் அமலாபாலின் கார் பதிவு செய்திருந்த முகவரி போலியானது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முகவரியில் விசாரணை
இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட கேரள போலீசார், அமலாபாலின் கார் பதிவான முகவரிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அந்த முகவரில் வசித்துவந்தவர்கள் தங்களுக்கும் அமலாபாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தனர்.
திருவனந்தபுரம் போலீசார் வழக்கு
இதே நிலைதான் நடிகர் பகத் பாசில் விவகாரத்திலும். இதனால் நடிகை அமலாபால், நடிகர் பகத்பாசில் இருவர் மீதும் திருவனந்தபுரம் போலுசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை நிறுவனத்திற்கு தொடர்பா?
இதில் இன்னோரு அதிர்ச்சி என்னவென்றால், அமலாபாலுக்கு வங்கி கடன் மூலம் கார் வாங்கி கொடுத்தது சென்னை விமானநிலையத்திற்கு அருகில் உள்ள டிரான்ஸ் கார் இந்தியா பிரைவேட் நிறுவனம். இந்த நிறுவனத்திலும் விசாரணை நடத்த கேரள போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் போலியான ஆவணங்களை தயாரித்தது யார் என்ற கேள்விதான் தற்போது விசாரணை அதிகாரிகளை தலையை பிய்த்துக் கொள்ள வைத்துள்ளது.
விஸ்வரூபமெடுக்குமா?
இது குறித்து விசாரணை நடத்த தமிழக போலீசாரிடம் உதவி கேட்கலாம் என கேரள போலீசார் முடிவு செய்துள்ளனர். அமலாபால் கார் பதிவு செய்த விவகாரத்தை தோண்டினால், தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கார், பேருந்துகளை புதுச்சேரியில் பதிவு செய்துள்ளது அம்பலமாகலாம். ஆனால், அரசியல்வாதிகள், நட்சத்திரங்கள், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் இந்த குற்றம் செய்துள்ளதால், தமிழகத்தில் விசாரணை நடக்காது என்பதே எதார்த்தம்.