என் ஆசைக்கு இணங்கினால் நிறைய மார்க் கிடைக்கும்: அரசு வேளாண் கல்லூரியில் மாணவிக்கு செக்ஸ் தொல்லை!
திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் மாணவிக்கு உதவி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திருவண்ணாமலை: என் ஆசைக்கு இணங்கினால் அதிக மதிப்பெண் பெற்று தருகிறேன் என கூறி திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் மாணவிக்கு உதவி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூரில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண் கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
இக்கல்லூரியின் அருகிலேயே ஆண்கள், பெண்கள் விடுதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன. இந்நிலையில் கல்லூரியில் உதவி பேராசிரியராக மதுரையை சேர்ந்த தங்கபாண்டியன் என்ற 40 வயது நபர் பணிபுரிந்து வருகிறார்.
மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்
இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் இரவு நேரங்களில் கல்லூரியின் பெண்கள் விடுதிக்கு சென்று சென்னை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். விடிய விடிய மாணவியை தனது ஆசைக்கு இணங்கும்படி கூறி பிரைன்ட் வாஷ் செய்துள்ளார்.
விடுதி வார்டன்களிடம் புகார்
அவரது டார்ச்சரை தாங்க முடியாத மாணவி, இதுபற்றி விடுதி வார்டன்கள் மைதிலி, புனிதா ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் உதவி பேராசிரியர் சொல்படி கேட்டால் பெரிய ஆளாகி விடலாம் என்று கூறி அதிர்ச்சி அளித்துள்ளனர்.
வார்டன்களும் டார்ச்சர்
உதவி பேராசிரியரின் ஆசைக்கு இணங்குமாறு மாணவியிடம் விடுதி வார்டன்கள் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி, சென்னையில் உள்ள பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
முற்றுகை போராட்டம்
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, வாழவச்சனூர் விரைந்து வந்து அக்கிராம மக்களிடம் தனது மகளின் நிலை குறித்து தெரிவித்தார். இதையடுத்து மாணவிக்கு ஆதரவாக திரண்ட கிராம மக்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் கல்லூரி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் விசாரணை
பின்னர் அவர்கள் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். தகவலறிந்த திருவண்ணாமலை டிஎஸ்பி பழனி மற்றும் போலீசார் வேளாண் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, ‘எங்களிடம் புகார் வரவில்லை. கல்லூரியில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்து கல்லூரி சார்பிலோ, மாணவி சார்பிலோ புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளனர்.
கல்லூரி முதல்வர் விசாரணை
இதற்கிடையில் மாணவி தான் தொடர்ந்து கல்லூரி விடுதியில் தங்கி படிக்கப்போவதாக முதல்வரிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதேநேரத்தில் உதவி பேராசிரியர் தங்கபாண்டியன், விடுதி வார்டன்கள் மைதிலி, புனிதா ஆகியோரிடம் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.
செல்போன் பேச்சு ஒப்படைப்பு
உதவி பேராசிரியர், விடுதி வார்டன்கள் தன்னிடம் செல்போன் மூலம் பேசிய பேச்சுக்களை பதிவு செய்து வைத்துள்ள கல்லூரி மாணவி, அதை தனது தந்தை மூலம் கல்லூரி முதல்வரிடம் ஆதாரமாக வழங்கியுள்ளார்.
என் ஆசைக்கு இணங்கினால்
அதில், ‘உதவி பேராசிரியர் மாணவியிடம், ‘எனது ஆசைக்கு இணங்கினால் அதிக மதிப்பெண்கள் பெற உதவுகிறேன்' என்று கூறியுள்ளார். அதேபோல் விடுதி வார்டன்கள் 2 பேரும் மாணவியிடம், ‘தங்கபாண்டியன் சாரின் ஆசையை நிறைவேற்றிவிடு.
வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம்
உன்னை அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வைப்பதுடன், பெரிய லெவலுக்கு கொண்டு போவார். இதே கல்லூரியிலேயே நீ பேராசிரியராக வரலாம். அவருக்கு ரெண்டாம் தாரமாகவும் ஆகி வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம்' என்று மாணவியை மூளை சலவை செய்துள்ளனர்.
மறந்துவிட்டு ஜாலியாக இரு
மேலும் ஒரு நாள் தங்கபாண்டியன் சாருடன் அட்ஜஸ்ட் செய்துவிட்டு நடந்தவற்றை மறந்துவிடு என்றும் விடுதி வார்டன்கள் தெரிவித்துள்ளனர். நீ என்ன புகார் கொடுத்தாலும் உன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவோம், உனக்கு எதிராக ஆதாரங்ளை நிரூபிக்க முடியும் என்றும் வார்டன்கள் மாணவியை மிரட்டியுள்ளனர்
பெரும் அதிர்ச்சி
ஏற்கனவே அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் சிக்கி கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். அவர் மீதான விசாரணை நடந்து வரும் நிலையில் திருவண்ணாமலை அரசுக்கல்லூரியிலும் அதேபோன்ற சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.