திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா - 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.
தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது. தினமும் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.
தீபத் திருநாள் தேரோட்டம்:
தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 22 ஆம் தேதி நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் 25-ந் தேதி மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
3 நாட்கள் உற்சவம்:
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்பு 3 நாட்கள் உற்சவம் நடக்கும். அதன்படி முதல் நாள் உற்சவமான துர்க்கையம்மன் உற்சவம் நேற்று நடந்தது.
துர்க்கையம்மன் கோவில் அலங்காரம்:
இதற்காக சின்னக்கடை தெருவில் உள்ள துர்க்கையம்மன் கோவிலில் நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது அதைத்தொடர்ந்து துர்க்கையம்மன் வீதி உலா நடந்தது.
காமதேனு வாகனம்:
துர்க்கையம்மன் கோவிலில் இருந்து காமதேனு வாகனத்தில் புறப்பட்டு அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.