யாகம் நடத்த நிர்வாண சாமியாருக்கு தடை.. கிரிவலபாதை ஒரு புண்ணிய பூமி: தி.மலை மாவட்ட நீதிபதி உத்தரவு
திருவண்ணாமலை: உலக நன்மை வேண்டி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நிர்வாண நிலையில் யாகம் நடத்தி வந்த ஆந்திர மாநில சாமியாருக்கு அம்மாவட்ட நீதிபதி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
அட்ட யோகிஸ்வரா மவுனி திகம்பரி ஷட்டகோபி என்ற சாமியார், கடந்த 25ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்தார். அன்றைய தினத்திலிருந்து உலக நன்மைக்காக நிர்வாண பூஜையில் ஈடுபட்டு வருகிறார். 61 நாட்களுக்கு காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் தொடர்ந்து நடத்தும் நிர்வாண பூஜை சமயங்களில் இவர், யாரிடமும் பேசமாட்டாராம்.
இவர் பேசி 37 வருடங்கள் ஆகிறதாகவும் தான் கூற நினைப்பதை ஒரு பேப்பரில் மட்டும் எழுதி காட்டுவார் எனவும் கூறப்பட்டது. மேலும் இந்த யாகம் வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சாமியாரின் நிர்வாண பூஜை மாவட்ட மக்களை மட்டுமல்லாமல், பக்தர்கள் அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து பல்வேறு நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கும் புகார்கள் வந்து குவிந்தன. அந்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி, நிர்வாண பூஜை நடத்தி கொண்டிருந்த ஆந்திர சாமியார் இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர்களை அங்கிருந்து காலி செய்யும்படி கூறினார்.
அதனை தொடர்ந்து, இது சம்பந்தமாக ஒரு ஆணையும் பிறப்பித்துள்ளார். அதில், கிரிவலப்பாதை என்பது ஆன்மீக புண்ணிய பூமி என்பதால், பொதுமக்களுக்கும் மற்றும் பொதுநலனைக் கருத்தில் கொண்டும் நடைபெற்றுவரும் இந்த நிர்வாண பூஜைக்கு தடை விதித்து உத்தரவிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணை பிறப்பிக்கப்பட்ட உடனேயே நிர்வாண பூஜை செய்த இடத்துக்கு விரைந்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் இறங்கினர்.