திருவண்ணாமலை தீப விழாவுக்கு 2,100 சிறப்பு பேருந்துகள், 12 சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு !
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 2,100 சிறப்புப் பேருந்துகள், 12 சிறப்பு ரயில்கள் இயக்க நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விவரிசையாக வருகிற 25-ந் தேதி நடைபெறுகிறது. தீபத் திருவிழாவைக் காண வரும் பக்தர்களின் நலன் கருதி தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 2,100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், சென்னை, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 24, 25-ந் தேதிகளில் 12 சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 23, தீபத் திருவிழா நடைபெறும் 25 ஆகிய 2 நாள்களில் திருவண்ணாமலை நகரைச் சுற்றியுள்ள 23 டாஸ்மாக் மதுக் கடைகளும் மூடப்படும் என்று ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.